திருவருட்பா  7. நான் ஏன் பிறந்தேன்

குலத்திடையும்  கொடியன்ஒரு  குடித்தனத்தும்  கொடியேன் 
குறிகளிலும்  கொடியன்அன்றிக்  குணங்களிலும்  கொடியேன் 
மலத்திடையே  புழுத்தசிறு  புழுக்களிலும்  கடையேன் 
வன்மனத்துப்  பெரும்பாவி  வஞ்சநெஞ்சப்  புலையேன் 
நலத்திடைஓர்  அணுஅளவும்  நண்ணுகிலேன்  பொல்லா 
நாய்க்குநகை  தோன்றநின்றேன்  பேய்க்கும்மிக  இழிந்தேன் 
நிலத்திடைநான்  ஏன்பிறந்தேன்  நின்கருத்தை  அறியேன் 
நிர்க்குணனே  நடராஜ  நிபுணமணி  விளக்கே. 
1
விளக்கறியா  இருட்டறையில்  கவிழ்ந்துகிடந்  தழுது 
விம்முகின்ற  குழவியினும்  மிகப்பெரிதும்  சிறியேன் 
அளக்கறியாத்  துயர்க்கடலில்  விழுந்துநெடுங்  காலம் 
அலைந்தலைந்து  மெலிந்ததுரும்  பதனின்மிகத்  துரும்பேன் 
கிளக்கறியாக்  கொடுமைஎலாம்  கிளைத்தபழு  மரத்தேன் 
கெடுமதியேன்  கடுமையினேன்  கிறிபேசும்  வெறியேன் 
களக்கறியாப்  புவியிடைநான்  ஏன்பிறந்தேன்  அந்தோ 
கருணைநடத்  தரசேநின்  கருத்தைஅறி  யேனே. 
2
அறியாத  பொறியவர்க்கும்  இழிந்ததொழி  லவர்க்கும் 
அதிகரித்துத்  துன்மார்க்கத்  தரசுசெயுங்  கொடியேன் 
குறியாத  கொடும்பாவச்  சுமைசுமக்கும்  திறத்தேன் 
கொல்லாமை  என்பதைஓர்  குறிப்பாலும்  குறியேன் 
செறியாத  மனக்கடையேன்  தீமையெலாம்  உடையேன் 
சினத்தாலும்  மதத்தாலும்  செறிந்தபுதல்  அனையேன் 
எறியாத  புவியிடைநான்  ஏன்பிறந்தேன்  உன்றன் 
இதயமறி  யேன்மன்றில்  இனித்தநடத்  திறையே. 
3
இனித்தபழச்  சாறுவிடுத்  திழித்தமலங்  கொளும்ஓர் 
இழிவிலங்கில்  இழிந்துநின்றேன்  இரக்கம்ஒன்றும்  இல்லேன் 
அனித்தநெறி  யிடைத்தொடர்ந்து  மனித்தஉடம்  பெடுத்த 
அறக்கடையர்  தமக்கெல்லாம்  அறக்கடையன்  ஆனேன் 
பனித்தமனக்  குரங்காட்டிப்  பலிக்குழலும்  கொடியேன் 
பாதகமும்  சூதகமும்  பயின்றபெறும்  படிறேன் 
தனித்தகடுங்  குணத்தேன்நான்  ஏன்பிறந்தேன்  நினது 
தனிக்கருத்தை  அறிந்திலேன்  சபைக்கேற்றும்  ஒளியே. 
4
ஏறுகின்றேம்  எனமதித்தே  இறங்குகின்ற  கடையேன் 
ஏதமெலாம்  நிறைமனத்தேன்  இரக்கமிலாப்  புலையேன் 
சீறுகின்ற  புலியனையேன்  சிறுதொழிலே  புரிவேன் 
செய்வகைஒன்  றறியாத  சிறியரினும்  சிறியேன் 
மாறுகின்ற  குணப்பேதை  மதியதனால்  இழிந்தேன் 
வஞ்சம்எலாம்  குடிகொண்ட  வாழ்க்கைமிக  உடையேன் 
வீறுகின்ற  உலகிடைநான்  ஏன்பிறந்தேன்  நினது 
மெய்க்கருத்தை  அறிந்திலேன்  விளங்குநடத்  தரசே. 
5
அரசர்எலாம்  மதித்திடப்பே  ராசையிலே  அரசோ 
டால்எனவே  மிகக்கிளைத்தேன்  அருளறியாக்  கடையேன் 
புரசமரம்  போற்பருத்தேன்  எட்டிஎனத்  தழைத்தேன் 
புங்கெனவும்  புளிஎனவும்  மங்கிஉதிர்  கின்றேன் 
பரசும்வகை  தெரிந்துகொளேன்  தெரிந்தாரைப்  பணியேன் 
பசைஅறியாக்  கருங்கல்மனப்  பாவிகளிற்  சிறந்தேன் 
விரசுநிலத்  தேன்பிறந்தேன்  நின்கருத்தை  அறியேன் 
வியக்குமணி  மன்றோங்கி  விளங்குபரம்  பொருளே. 
6
பொருளறியேன்  பொருளறிந்தார்  போன்றுநடித்  திங்கே 
பொங்கிவழிந்  துடைகின்றேன்  பொய்யகத்தேன்  புலையேன் 
மருளறியாத்  திருவாளர்  உளங்கயக்கத்  திரிவேன் 
வையுண்டும்  உழவுதவா  மாடெனவே  தடித்தேன் 
வெருளறியாக்  கொடுமனத்தேன்  விழற்கிறைத்துக்  களிப்பேன் 
வீணர்களில்  தலைநின்றேன்  விலக்கனைத்தும்  புரிவேன் 
தெருளறியேன்  உலகிடைநான்  ஏன்பிறந்தேன்  நினது 
திருவுளத்தை  அறிந்திலேன்  தெய்வநடந்  தவனே. 
7
தவம்புரியேன்  தவம்புரிந்தார்  தமைப்போல  நடித்துத் 
தருக்குகின்றேன்  உணர்ச்சியிலாச்  சடம்போல  இருந்தேன் 
பவம்புரிவேன்  கமரினிடைப்  பால்கவிழ்க்கும்  கடையேன் 
பயனறியா  வஞ்சமனப்  பாறைசுமந்  துழல்வேன் 
அவம்புரிவேன்  அறிவறியேன்  அன்பறியேன்  அன்பால் 
ஐயாநின்  அடியடைந்தார்க்  கணுத்துணையும்  உதவேன் 
நவம்புரியும்  உலகிடைநான்  ஏன்பிறந்தேன்  நினது 
நல்லதிரு  வுளம்அறியேன்  ஞானநடத்  திறையே. 
8
இறைஅளவும்  அறிவொழுக்கத்  திச்சையிலேன்  நரகில் 
இருந்துழன்று  வாடுகின்றோர்  எல்லார்க்கும்  இழிந்தேன் 
பொறைஅளவோ  நன்மைஎலாம்  போக்கில்விட்டுத்  தீமை 
புரிகின்றேன்  எரிகின்ற  புதுநெருப்பிற்  கொடியேன் 
நிறைஅளவோ  முறைஅளவோ  நிலைஅளவுந்  தவிர்ந்த 
நெடுஞ்சால  நெஞ்சகத்தேன்  நீலவிடம்  போல்வேன் 
கறையளவா  உலகிடைநான்  ஏன்பிறந்தேன்  நினது 
கருத்தறியேன்  கருணைநடங்  காட்டுகின்ற  குருவே. 
9
காட்டுகின்ற  உவர்க்கடல்போல்  கலைகளிலும்  செல்வக் 
களிப்பினிலும்  சிறந்துமிகக்  களித்துநிறை  கின்றேன் 
நீட்டுகின்ற  ஆபத்தில்  ஒருசிறிதும்  உதவேன் 
நெடுந்தூரம்  ஆழ்ந்துதவாப்  படுங்கிணறு  போல்வேன் 
ஆட்டுகின்ற  அருட்பெருமை  ஒருசிறிதும்  தெரியேன் 
அச்சமிலேன்  நாணமிலேன்  அடக்கம்ஒன்றும்  இல்லேன் 
கூட்டுகின்ற  உலகிடைநான்  ஏன்பிறந்தேன்  நினது 
குறிப்பறியேன்  மன்றில்நடங்  குலவுகுல  மணியே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com