திருவருட்பா  6. ஆற்றாமை

எழுவினும்  வலிய  மனத்தினேன்  மலஞ்சார்  ஈயினும்  நாயினும்  இழிந்தேன் 
புழுவினும்  சிறியேன்பொய்விழைந்  துழல்வேன்புன்மையேன்  புலைத்தொழிற்கடையேன் 
வழுவினும்  பெரியேன்  மடத்தினும்  பெரியேன்  மாண்பிலா  வஞ்சக  நெஞ்சக் 
குழுவினும்  பெரியேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
1
கற்றமே  லவர்தம்  உறவினைக்  கருதேன்  கலகர்தம்  உறவினிற்  களித்தேன் 
உற்றமே  தகவோர்  உவட்டுற  இருந்தேன்  உலகியற்  போகமே  உவந்தேன் 
செற்றமே  விழையும்  சிறுநெறி  பிடித்தேன்  தெய்வம்ஒன்  றெனும்அறி  வறியேன் 
குற்றமே  உடையேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
2
கடுமையேன்  வஞ்சக்  கருத்தினேன்  பொல்லாக்  கண்மனக்  குரங்கனேன்  கடையேன் 
நெடுமைஆண்  பனைபோல்  நின்றவெற்  றுடம்பேன்  நீசனேன்  பாசமே  உடையேன் 
நடுமைஒன்  றறியேன்  கெடுமையிற்  கிளைத்த  நச்சுமா  மரம்எனக்கிளைத்தேன் 
கொடுமையே  குறித்தேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
3
நிலத்திலும்பணத்தும்  நீள்விழிமடவார்  நெருக்கிலும்பெருக்கிய  நினைப்பேன் 
புலத்திலும்  புரைசேர்  பொறியிலும்  மனத்தைப்  போக்கிவீண்  போதுபோக்  குறுவேன் 
நலத்தில்ஓர்  அணுவும்  நண்ணிலேன்  கடைய  நாயினுங்  கடையனேன்  நவையேன் 
குலத்திலும்  கொடியேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
4
செடிமுடிந்  தலையும்மனத்தினேன்  துன்பச்  செல்லினால்அரிப்புண்டசிறியேன் 
அடிமுடி  அறியும்  ஆசைசற்  றறியேன்  அறிந்தவர்  தங்களை  அடையேன் 
படிமுடி  வழித்துக்  கடிகொளும்  கடையர்பணத்திலும்  கொடியனேன்  வஞ்கக் 
கொடிமுடிந்  திடுவேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
5
அரங்கினிற்  படைகொண்  டுயிர்க்கொலை  புரியும்  அறக்கடை  யவரினுங்  கடையேன் 
இரங்கில்ஓர்  சிறிதும்  இரக்கம்உற்  றறியேன்  இயலுறு  நாசியுட்  கிளைத்த 
சிரங்கினிற்  கொடியேன்  சிவநெறி  பிடியேன்  சிறுநெறிச்  சழக்கையே  சிலுகுக் 
குரங்கெனப்  பிடித்தேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
6
வாட்டமே  உடையார்  தங்களைக்  காணின்  மனஞ்சிறிதிரக்கமுற்  றறியேன் 
கோட்டமே  உடையேன்  கொலையனேன்  புலையேன்  கூற்றினும்  கொடியனேன்  மாயை 
ஆட்டமே  புரிந்தேன்  அறத்தொழில்  புரியேன்  அச்சமும்  அவலமும்  இயற்றும் 
கூட்டமே  விழைந்தேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
7
கலைத்தொழில்  அறியேன்  கள்உணுங்  கொடியேன்  கறிக்குழல்  நாயினும்  கடையேன் 
விலைத்தொழில்  உடையேன்  மெய்எலாம்  வாயாய்  விளம்புறும்  வீணனேன்  அசுத்தப் 
புலைத்தொழில்  புரிவேன்  பொய்யனேன்  சீற்றம்  பொங்கிய  மனத்தினேன்  பொல்லாக் 
கொலைத்தொழில்  புரிவேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
8
பணமிலார்க்  கிடுக்கண்  புரிந்துணுஞ்  சோற்றுப்  பணம்பறித்  துழல்கின்ற  படிறேன் 
எணமிலா  தடுத்தார்க்  குறுபெருந்தீமை  இயற்றுவேன்  எட்டியேஅனையேன் 
மணமிலா  மலரிற்  பூத்தனன்  இருகால்  மாடெனத்  திரிந்துழல்  கின்றேன் 
குணமிலாக்  கொடியேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
9
கடியரில்  கடியேன்  கடையரில்  கடையேன்  கள்வரில்  கள்வனேன்  காமப் 
பொடியரில்  பொடியேன்  புலையரில்  புலையேன்  பொய்யரில்  பொய்யனேன்  பொல்லாச் 
செடியரில்  செடியேன்  சினத்தரில்  சினத்தேன்  தீயரில்  தீயனேன்  பாபக் 
கொடியரில்  கொடியேன்  அம்பலக்  கூத்தன்  குறிப்பினுக்  கென்கட  வேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com