திருவருட்பா  25. அனுபோக நிலயம்

இனிப்பிரிந்  திறையும்  இருக்கலேன்  பிரிவை 
எண்ணினும்  ஐயவோ  மயங்கிப் 
பனிப்பில்என்  உடம்பும்  உயிரும்உள்  உணர்வும் 
பரதவிப்  பதைஅறிந்  திலையோ 
தனிப்படு  ஞான  வெளியிலே  இன்பத் 
தனிநடம்  புரிதனித்  தலைவா 
கனிப்பயன்  தருதற்  கிதுதகு  தருணம் 
கலந்தருள்  கலந்தருள்  எனையே. 
1
பிரிந்தினிச்  சிறிதும்  தரிக்கலேன்  பிரிவைப் 
பேசினும்  நெய்விடுந்  தீப்போல் 
எரிந்துளங்  கலங்கி  மயங்கல்கண்  டிலையோ 
எங்கணும்  கண்ணுடை  எந்தாய் 
புரிந்தசிற்  பொதுவில்  திருநடம்  புரியும் 
புண்ணியா  என்னுயிர்த்  துணைவா 
கரந்திடா  துறுதற்  கிதுதகு  தருணம் 
கலந்தருள்  கலந்தருள்  எனையே. 
2
மேலைஏ  காந்த  வெளியிலே  நடஞ்செய் 
மெய்யனே  ஐயனே  எனக்கு 
மாலையே  அணிந்த  மகிழ்நனே  எல்லாம் 
வல்லனே  நல்லனே  அருட்செங் 
கோலையே  நடத்தும்  இறைவனே  ஓர்எண் 
குணத்தனே  இனிச்சகிப்  பறியேன் 
காலையே  தருதற்  கிதுதகு  தருணம் 
கலந்தருள்  கலந்தருள்  எனையே. 
3
பண்டுகொண்  டெனைத்தான்  பிழைகுறி  யாத 
பண்பனே  திருச்சிற்றம்  பலத்தே 
தொண்டுகொண்  டடியர்  களிக்கநின்  றாடும் 
தூயனே  நேயனே  பிரமன் 
விண்டுகண்  டறியா  முடிஅடி  எனக்கே 
விளங்குறக்  காட்டிய  விமலா 
கண்டுகொண்  டுறுதற்  கிதுதகு  தருணம் 
கலந்தருள்  கலந்தருள்  எனையே. 
4
தனித்துணை  எனும்என்  தந்தையே  தாயே 
தலைவனே  சிற்சபை  தனிலே 
இனித்ததெள்  ளமுதே  என்னுயிர்க்  குயிரே 
என்னிரு  கண்ணுள்மா  மணியே 
அனித்தமே  நீக்கி  ஆண்டஎன்  குருவே 
அண்ணலே  இனிப்பிரி  வாற்றேன் 
கனித்துணை  தருதற்  கிதுதகு  தருணம் 
கலந்தருள்  கலந்தருள்  எனையே. 
5
துன்பெலாம்  தவிர்க்கும்  திருச்சிற்றம்  பலத்தே 
சோதியுட்  சோதியே  அழியா 
இன்பெலாம்  அளிக்கும்  இறைவனே  என்னை 
ஈன்றநல்  தந்தையே  தாயே 
அன்பெலாம்  ஆகி  நிறைந்ததோர்  நிறைவே 
அண்ணலே  இனிப்பிரி  வாற்றேன் 
பொன்பதந்  தருதற்  கிதுதகு  தருணம் 
புணர்ந்தருள்  புணர்ந்தருள்  எனையே. 
6
ஏதும்ஒன்  றறியாப்  பேதையாம்  பருவத் 
தென்னைஆட்  கொண்டெனை  உவந்தே 
ஓதும்இன்  மொழியால்  பாடவே  பணிந்த 
ஒருவனே  என்னுயிர்த்  துணைவா 
வேதமும்  பயனும்  ஆகிய  பொதுவில் 
விளங்கிய  விமலனே  ஞான 
போதகம்  தருதற்  கிதுதகு  தருணம் 
புணர்ந்தருள்  புணர்ந்தருள்  எனையே. 
7
எண்ணிய  எனதுள்  எண்ணமே  எண்ணத் 
திசைந்தபே  ரின்பமே  யான்தான் 
பண்ணிய  தவமே  தவத்துறும்  பலனே 
பலத்தினால்  கிடைத்தஎன்  பதியே 
தண்ணிய  மதியே  மதிமுடி  அரசே 
தனித்தசிற்  சபைநடத்  தமுதே 
புண்ணியம்  அளித்தற்  கிதுதகு  தருணம் 
புணர்ந்தருள்  புணர்ந்தருள்  எனையே. 
8
மலப்பகை  தவிர்க்கும்  தனிப்பொது  மருந்தே 
மந்திர  மேஒளிர்  மணியே 
நிலைப்பட  எனைஅன்  றாண்டருள்  அளித்த 
நேயனே  தாயனை  யவனே 
பலப்படு  பொன்னம்  பலத்திலே  நடஞ்செய் 
பரமனே  பரமசிற்  சுகந்தான் 
புலப்படத்  தருதற்  கிதுதகு  தருணம் 
புணர்ந்தருள்  புணர்ந்தருள்  எனையே. 
9
களிப்புறும்  அடியேன்  கையிலே  கிடைத்த 
கற்பகத்  தீஞ்சுவைக்  கனியே 
வெளிப்புறத்  தோங்கும்  விளக்கமே  அகத்தே 
விளங்கும்ஓர்  விளக்கமே  எனக்கே 
ஒளிப்பிலா  தன்றே  அளித்தசிற்  பொதுவில் 
ஒருவனே  இனிப்பிரி  வாற்றேன் 
புளிப்பற  இனித்தற்  கிதுதகு  தருணம் 
புணர்ந்தருள்  புணர்ந்தருள்  எனையே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com