திருவருட்பா  16. தற் சுதந்தரம் இன்மை

இப்பாரில்  உடல்ஆவி  பொருளும்உன்பாற்  கொடுத்தேன்மற்  றெனக்கென்  றிங்கே 
எப்பாலும்  சுதந்தரம்ஓர்  இறையும்இலை  அருட்சோதி  இயற்கை  என்னும் 
துப்பாய  உடலாதி  தருவாயோ  இன்னும்எனைச்  சோதிப்  பாயோ 
அப்பாநின்  திருவுளத்தை  அறியேன்இவ்  வடியேனால்  ஆவ  தென்னே. 
1
என்னேஎம்  பெருமான்இங்  கின்னும்அணைந்  திலன்என்றே  ஏங்கி  ஏங்கி 
மன்னேஎன்  மணியேகண்  மணியேஎன்  வாழ்வேநல்  வரத்தாற்  பெற்ற 
பொன்னேஅற்  புதமேசெம்  பொருளேஎன்  புகலேமெய்ப்  போத  மேஎன் 
அன்னேஎன்  அப்பாஎன்  றழைத்தலன்றி  அடியேனால்  ஆவ  தென்னே. 
2
பொடிஎடுக்கப்  போய்அதனை  மறந்துமடி  எடுத்தரையில்  புனைவேன்  சில்லோர் 
தடிஎடுக்கக்  காணில்அதற்  குளங்கலங்கி  ஓடுவனித்  தரத்தேன்  இங்கே 
முடிஎடுக்க  வல்லேனோ  இறைவாநின்  அருள்இலதேல்  முன்னே  வைத்த 
அடிஎடுக்க  முடியாதே  அந்தோஇச்  சிறியேனால்  ஆவ  தென்னே. 
3
பாட்டுவித்தால்  பாடுகின்றேன்  பணிவித்தால்  பணிகின்றேன்  பதியே  நின்னைக் 
கூட்டுவித்தால்  கூடுகின்றேன்  குழைவித்தால்  குழைகின்றேன்  குறித்த  ஊணை 
ஊட்டுவித்தால்  உண்கின்றேன்  உறக்குவித்தால்  உறங்குகின்றேன்  உறங்கா  தென்றும் 
ஆட்டுவித்தால்  ஆடுகின்றேன்  அந்தோஇச்  சிறியேனால்  ஆவ  தென்னே. 
4
உடுப்பவனும்  உண்பவனும்  நானேஎன்  னவும்நாணம்  உறுவ  தெந்தாய் 
தடுப்பவனும்  தடைதீர்த்துக்  கொடுப்பவனும்  பிறப்பிறப்புத்  தன்னை  நீக்கி 
எடுப்பவனும்  காப்பவனும்  இன்பஅனு  பவஉருவாய்  என்னுள்  ஓங்கி 
அடுப்பவனும்  நீஎன்றால்  அந்தோஇச்  சிறியேனால்  ஆவ  தென்னே. 
5
சாவதென்றும்  பிறப்பதென்றும்  சாற்றுகின்றபெரும்பாவம்  தன்னைஎண்ணி 
நோவதின்று  புதிதன்றே  என்றும்உள  தால்இந்த  நோவை  நீக்கி 
ஈவதுமன்  றிடைநடிப்போய்  நின்னாலே  ஆகும்மற்றை  இறைவ  ராலே 
ஆவதொன்றும்  இல்லைஎன்றால்  அந்தோஇச்  சிறியேனால்  ஆவதென்னே. 
6
இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம்  தனித்தலைமைஇறைவா  உன்றன் 
நசைத்திடுபே  ரருட்செயலால்  அசைவதன்றி  ஐந்தொழில்செய்  நாத  ராலும் 
தசைத்திடுபுன்  துரும்பினையும்  அகங்கரித்துத்  தங்கள்சுதந்  தரத்தால்இங்கே 
அசைத்திடற்கு  முடியாதேல்  அந்தோஇச்  சிறியேனால்  ஆவ  தென்னே. 
7
கல்லாய  மனத்தையும்ஓர்  கணத்தினிலே  கனிவித்துக்  கருணை  யாலே 
பல்லாரும்  அதிசயிக்கப்  பக்குவந்தத்  தருட்பதமும்  பாலிக்  கின்றோய் 
எல்லாஞ்செய்  வல்லோய்சிற்  றம்பலத்தே  ஆடல்இடு  கின்றோய்  நின்னால் 
அல்லால்ஒன்  றாகாதேல்  அந்தோஇச்  சிறியேனால்  ஆவ  தென்னே. 
8
கரைசேரப்  புரிந்தாலும்  கடையேன்செய்  குற்றமெலாம்  கருதி  மாயைத் 
திரைசேரப்  புரிந்தாலும்  திருவுளமே  துணைஎனநான்  சிந்தித்  திங்கே 
உரைசேர  இருத்தல்அன்றி  உடையாய்என்  உறவேஎன்  உயிரே  என்றன் 
அரைசேஎன்  அம்மேஎன்  அப்பாஇச்  சிறியேனால்  ஆவ  தென்னே. 
9
இன்பேநன்  றருளிஅருள்  இயற்கையிலே  வைத்தாலும்  இங்கே  என்னைத் 
துன்பேசெய்  வித்தாலும்  என்செய்வேன்  நின்னருளே  துணைஎன்  றந்தோ 
என்பேதை  மனமடங்கி  இருப்பதன்றி  எல்லாங்கண்  டிருக்கும்  என்றன் 
அன்பேஎன்  அம்மேஎன்  அப்பாஇச்  சிறியேனால்  ஆவ  தென்னே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com