
அபயம் அபயம் அபயம்.
உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே அபயம்
எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை
அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே அபயம்
தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே அபயம்
ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே அபயம்
வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம்
நாரா யணனொடு நான்முக னாதியர்
பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம்
அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம்
குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம்
செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே அபயம்
வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்
மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்
நாத முடியில் நடம்புரிந் தன்பர்க்குப்
போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்
உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம்
சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
அபயம் அபயம் அபயம்.



