
இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
என்றும் தீரா வழக்குக் காண டி.
எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்
அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே
யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே. இவர்க்கும்
அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். இவர்க்கும்
சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு. இவர்க்கும்
இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
என்றும் தீரா வழக்குக் காண டி.



