திருவருட்பா  109. உலகப்பேறு

இன்பால்  உலகங்கள்  யாவும்  விளங்கின 
துன்பால்  இறந்தவர்  துன்பற்றுத்  தோன்றினர் 
அன்பால்  அடியவர்  ஆடினர்  பாடினர் 
என்பால்  அருட்பெருஞ்  சோதியார்  எய்தவே. 
1
பாம்பெலாம்  ஓடின  பறவையுட்  சார்ந்தன 
தீம்பலா  வாழைமாத்  தென்னை  சிறந்தன 
ஆம்பலன்  மென்மேலும்  ஆயின  என்னுளத் 
தோம்பல்என்  அருட்பெருஞ்  சோதியார்  ஓங்கவே. 
2
மலங்கழிந்  துலகவர்  வானவர்  ஆயினர் 
வலம்பெறு  சுத்தசன்  மார்க்கம்  சிறந்தது 
பலம்பெறு  மனிதர்கள்  பண்புளர்  ஆயினர் 
நலம்பெறும்  அருட்பெருஞ்  சோதியார்  நண்ணவே. 
3
முன்னுள  மார்க்கங்கள்  யாவும்  முடிந்தன 
மன்னுள  சுத்தசன்  மார்க்கம்  சிறந்தது 
பன்னுளந்  தெளிந்தன  பதிநடம்  ஓங்கின 
என்னுளத்  தருட்பெருஞ்  சோதியார்  எய்தவே. 
4
இடம்பெற்ற  உயிர்எலாம்  விடம்அற்று  வாழ்ந்தன 
மடம்பெற்ற  மனிதர்கள்  மதிபெற்று  வாழ்கின்றார் 
திடம்பெற்றே  எழுகின்றார்  செத்தவர்  தினந்தினம் 
நடம்பெற்ற  அருட்பெருஞ்  சோதியார்  நண்ணவே. 
5
அண்டமும்  அகிலமும்  அருளர  சாட்சியைக் 
கொண்டன  ஓங்கின  குறைஎலாம்  தீர்ந்தன 
பண்டங்கள்  பலித்தன  பரிந்தென  துள்ளத்தில் 
எண்டகும்  அருட்பெருஞ்  சோதியார்  எய்தவே. 
6
குணங்கள்  சிறந்தன  குற்றங்கள்  அற்றன 
மணங்கள்  விளங்கின  வாழ்வுகள்  ஓங்கின 
பிணங்கள்  எலாம்உயிர்  பெற்றெழுந்  தோங்கின 
இணங்க  அருட்பெருஞ்  சோதியார்  எய்தவே. 
7
பத்தர்கள்  பாடினர்  பணிந்துநின்  றாடினர் 
முத்தர்கள்  மெய்ப்பொருள்  முன்னி  மகிழ்ந்தனர் 
சித்தர்கள்  ஆனந்தத்  தெள்ளமு  துண்டனர் 
சுத்த  அருட்பெருஞ்  சோதியார்  தோன்றவே. 
8
ஏழுல  கவத்தைவிட்  டேறினன்  மேனிலை 
ஊழிதோ  றூழியும்  உயிர்தழைத்  தோங்கினன் 
ஆழியான்  அயன்முதல்  அதிசயித்  திடஎனுள் 
வாழிஅ  ருட்பெருஞ்  சோதியார்  மன்னவே. 
9
இருட்பெரு  மலமுழு  துந்தவிர்ந்  திற்றது 
மருட்பெரும்  கன்மமும்  மாயையும்  நீங்கின 
தெருட்பெருஞ்  சித்திகள்  சேர்ந்தன  என்னுளத் 
தருட்பெருஞ்  சோதிஎன்  அன்பிற்  கலந்ததே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com