திருவருட்பா  1. பரசிவ வணக்கம்

எல்லாம்  செயல்கூடும்  என்ஆணை  அம்பலத்தே 
எல்லாம்வல்  லான்தனையே  ஏத்து. 
1
இன்றுவரு  மோநாளைக்  கேவருமோ  அல்லதுமற் 
றென்றுவரு  மோஅறியேன்  எங்கோவே  -  துன்றுமல 
வெம்மாயை  அற்று  வெளிக்குள்  வெளிகடந்து 
சும்மா  இருக்கும்  சுகம். 
2
திருவிளங்கச்  சிவயோக  சித்திஎலாம்  விளங்கச் 
சிவஞான  நிலைவிளங்கச்  சிவானுபவம்  விளங்கத் 
தெருவிளங்கு  திருத்தில்லைத்  திருச்சிற்றம்  பலத்தே 
திருக்கூத்து  விளங்கஒளி  சிறந்ததிரு  விளக்கே 
உருவிளங்க  உயிர்விளங்க  உணர்ச்சியது  விளங்க 
உலகமெலாம்  விளங்கஅருள்  உதவுபெருந்  தாயாம் 
மருவிளங்கு  குழல்வல்லி  மகிழ்ந்தொருபால்  விளங்க 
வயங்குமணிப்  பொதுவிளங்க  வளர்ந்தசிவக்  கொழுந்தே. 
3
அன்பெனும்  பிடியுள்  அகப்படும்  மலையே 
அன்பெனும்  குடில்புகும்  அரசே 
அன்பெனும்  வலைக்குட்  படுபரம்  பொருளே 
அன்பெனும்  கரத்தமர்  அமுதே 
அன்பெனும்  கடத்துள்  அடங்கிடும்  கடலே 
அன்பெனும்  உயிர்ஒளிர்  அறிவே 
அன்பெனும்  அணுவுள்  ளமைந்தபே  ரொளியே 
அன்புரு  வாம்பர  சிவமே. 
4

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com