திருவருட்பா  6. எண்ணப் பத்து

அணிகொள்  வேல்உடை  அண்ணலே  நின்திரு  அடிகளை  அன்போடும் 
பணிகி  லேன்அகம்  உருகிநின்  றாடிலேன்  பாடிலேன்  மனமாயைத் 
தணிகி  லேன்திருத்  தணிகையை  நினைகிலேன்  சாமிநின்  வழிபோகத் 
துணிகி  லேன்இருந்  தென்செய்தேன்  பாவியேன்  துன்பமும்  எஞ்சேனே. 
1
சேல்பி  டித்தவன்  தந்தைஆ  தியர்தொழும்  தெய்வமே  சிவப்பேறே 
மால்பி  டித்தவர்  அறியொணாத்  தணிகைமா  மலைஅமர்ந்  திடுவாழ்வே 
வேல்பி  டித்தருள்  வள்ளலே  யான்சதுர்  வேதமும்  காணாநின் 
கால்பி  டிக்கவும்  கருணைநீ  செய்யவும்  கண்டுகண்  களிப்பேனோ. 
2
களித்து  நின்திருக்  கழலிணை  ஏழையேன்  காண்பனோ  அலதன்பை 
ஒளித்து  வன்துயர்  உழப்பனோ  இன்னதென்  றுணர்ந்திலேன்  அருட்போதம் 
தெளித்து  நின்றிடும்  தேசிக  வடிவமே  தேவர்கள்  பணிதேவே 
தளிர்த்த  தண்பொழில்  தணிகையில்  வளர்சிவ  தாருவே  மயிலோனே. 
3
மயிலின்  மீதுவந்  தருள்தரும்  நின்திரு  வரவினுக்  கெதிர்பார்க்கும் 
செயலி  னேன்கருத்  தெவ்வணம்  முடியுமோ  தெரிகிலேன்  என்செய்கேன் 
அயிலின்  மாமுதல்  தடிந்திடும்  ஐயனே  ஆறுமா  முகத்தேவே 
கயிலை  நேர்திருத்  தணிகைஅம்  பதிதனில்  கந்தன்என்  றிருப்போனே. 
4
இருப்பு  நெஞ்சகக்  கொடியனேன்  பிழைதனை  எண்ணுறேல்  இனிவஞ்சக் 
கருப்பு  காவணம்  காத்தருள்  ஐயனே  கருணைஅம்  கடலேஎன் 
விருப்புள்  ஊறிநின்  றோங்கிய  அமுதமே  வேல்உடை  எம்மானே 
தருப்பு  காஇனன்  விலகுறும்  தணிகைவாழ்  சாந்தசற்  குணக்குன்றே. 
5
குன்று  நேர்பிணித்  துயரினால்  வருந்திநின்  குரைகழல்  கருதாத 
துன்று  வஞ்சகக்  கள்ளனேன்  நெஞ்சகத்  துயர்அறுத்  தருள்செய்வான் 
இன்று  மாமயில்  மீதினில்  ஏறிஇவ்  வேழைமுன்  வருவாயேல் 
நன்று  நன்றதற்  கென்சொல்வார்  தணிகைவாழ்  நாதநின்  அடியாரே. 
6
யாரை  யுந்துணை  கொண்டிலேன்  நின்அடி  இணைதுணை  அல்லால்நின் 
பேரை  உன்னிவாழ்ந்  திடும்படி  செய்வையோ  பேதுறச்  செய்வாயோ 
பாரை  யும்உயிர்ப்  பரப்பையும்  படைத்தருள்  பகவனே  உலகேத்தும் 
சீரை  உற்றிடும்  தணிகைஅம்  கடவுள்நின்  திருவுளம்  அறியேனே. 
7
உளங்கொள்  வஞ்சக  நெஞ்சர்தம்  இடம்இடர்  உழந்தகம்  உலைவுற்றேன் 
வளங்கொள்  நின்பத  மலர்களை  நாள்தொறும்  வாழ்த்திலேன்  என்செய்கேன் 
குளங்கொள்  கண்ணனும்  கண்ணனும்  பிரமனும்  குறிக்கரும்  பெருவாழ்வே 
தளங்கொள்  பொய்கைசூழ்  தணிகைஅம்  பதியில்வாழ்  தனிப்பெரும்  புகழ்த்தேவே. 
8
தேவர்  நாயகன்  ஆகியே  என்மனச்  சிலைதனில்  அமர்ந்தோனே 
மூவர்  நாயகன்  எனமறை  வாழ்த்திடும்  முத்தியின்  வித்தேஇங் 
கேவ  ராயினும்  நின்திருத்  தணிகைசென்  றிறைஞ்சிடில்  அவரேஎன் 
பாவ  நாசம்செய்  தென்றனை  ஆட்கொளும்  பரஞ்சுடர்  கண்டாயே. 
9
கண்ட  னேகவா  னவர்தொழும்  நின்திருக்  கழல்இணை  தனக்காசை 
கொண்ட  னேகமாய்த்  தெண்டன்இட்  டானந்தக்  கூத்தினை  உகந்தாடித் 
தொண்ட  னேனும்நின்  அடியரில்  செறிவனோ  துயர்உழந்  தலைவேனோ 
அண்ட  னேதிருத்  தணிகைவாழ்  அண்ணலே  அணிகொள்வேல்  கரத்தோனே 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com