
உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
இலகுசிற் பரகுக என்று நீறிடில்
கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே.
மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
தெருளுறு நீற்றினைச் சிவஎன் றுட்கொளில்
அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.
வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
இல்வினைச் சண்முக என்று நீறிடில்
நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே.
கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே
விடும்புனல் எனத்துயர் விளைக்கும் நெஞ்சமே
இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில்
நடுங்கும்அச் சம்நினை நண்ணற் கென்றுமே.
அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
இன்பறாச் சண்முக என்று நீறிடில்
துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்குமே.
. செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே
எறிவிலாச் சண்முக என்று நீறிடில்
மறிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.
மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
வெறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
நெறிசிவ சண்முக என்று நீறிடில்
முறிகொளீஇ நின்றஉன் மூடம் தீருமே.
காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
நேயமாம் சண்முக என்று நீறிடில்
தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.
சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
நிதிசிவ சண்முக என்று நீறிடில்
வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே.
பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
இசைசிவ சண்முக என்று நீறிடில்
திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே.



