திருவருட்பா  25. காணாப் பத்து

வரங்கொள்  அடியர்  மனமலரில்  மகிழ்வுற்  றமர்ந்த  மாமணியே 
திரங்கொள்  தணிகை  மலைவாழும்  செல்வப்  பெருக்கே  சிற்பரமே 
தரங்கொள்  உலக  மயல்அகலத்  தாழ்ந்துள்  உருக  அழுதழுது 
கரங்கொள்  சிரத்தோ  டியான்உன்னைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
1
வல்லி  ஒருபால்  வானவர்தம்  மகளாண்  டொருபால்  வரமயில்மேல் 
எல்லின்  இலங்கு  நெட்டிலைவேல்  ஏந்தி  வரும்என்  இறையவனே 
சொல்லி  அடங்காத்  துயர்இயற்றும்  துகள்சேர்  சன்னப்  பெருவேரைக் 
கல்லி  எறிந்து  நின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
2
உருத்துள்  இகலும்  சூர்முதலை  ஒழித்து  வானத்  தொண்பதியைத் 
திருத்தும்  அரைசே  தென்தணிகைத்  தெய்வ  மணியே  சிவஞானம் 
அருத்தும்  நினது  திருவருள்கொண்  டாடிப்  பாடி  அன்பதனால் 
கருத்துள்  உருகி  நின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
3
போதல்  இருத்தல்  எனநினையாப்  புனிதர்  சனனப்  போரோடு 
சாதல்  அகற்றும்  திருத்தணிகைச்  சைவக்  கனியே  தற்பரமே 
ஓதல்  அறியா  வஞ்சகர்பால்  உழன்றே  மாதர்க்  குள்ளுருகும் 
காதல்  அகற்றி  நின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
4
வீட்டைப்  பெறுவோர்  உள்அகத்து  விளங்கும்  விளக்கே  விண்ணோர்தம் 
நாட்டை  நலஞ்செய்  திருத்தணிகை  நகத்தில்  அமர்ந்த  நாயகமே 
கேட்டைத்  தருவஞ்  சகஉலகில்  கிடைத்த  மாய  வாழ்க்கைஎனும் 
காட்டைக்  கடந்து  நின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
5
மட்டித்  தளறு  படக்கடலை  மலைக்கும்  கொடிய  மாஉருவைச் 
சட்டித்  தருளும்  தணிகையில்எந்  தாயே  தமரே  சற்குருவே 
எட்டிக்  கனியாம்  இவ்வுலகத்  திடர்விட்  டகல  நின்பதத்தைக் 
கட்டித்  தழுவிநின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
6
இலக்கம்  அறியா  இருவினையால்  இம்மா  னிடம்ஒன்  றெடுத்தடியேன் 
விலக்கம்  அடையா  வஞ்சகர்பால்  வீணாட்  போக்கி  மேவிமனத் 
தலக்கண்  இயற்றும்  பொய்வாழ்வில்  அலைந்தேன்  தணிகை  அரசேஅக் 
கலக்கம்  அகன்று  நின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
7
விரைவாய்  கடப்பந்  தார்அணிந்து  விளங்கும்  புயனே  வேலோனே 
தரைவாய்  தவத்தால்  தணிகைஅமர்  தருமக்  கடலே  தனிஅடியேன் 
திரைவாய்  சனனக்  கடற்படிந்தே  தியங்கி  அலைந்தேன்  சிவஞானக் 
கரைவாய்  ஏறி  நின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
8
பள்ள  உலகப்  படுகுழியில்  பரிந்தங்  குழலா  தானந்த 
வெள்ளத்  தழுந்தும்  அன்பர்விழி  விருந்தே  தணிகை  வெற்பரசே 
உள்ளம்  அகல  அங்கும்இங்கும்  ஓடி  அலையும்  வஞ்சநெஞ்சக் 
கள்ளம்  அகற்றி  நின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
9
அடலை  அணிந்தோர்  புறங்காட்டில்  ஆடும்  பெருமான்  அளித்தருளும் 
விடலை  எனமூ  வரும்புகழும்  வேலோய்  தணிகை  மேலோயே 
நடலை  உலக  நடைஅளற்றை  நண்ணா  தோங்கும்  ஆனந்தக் 
கடலை  அடுத்து  நின்உருவைக்  கண்கள்  ஆரக்  கண்டிலனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com