திருவருட்பா  2. நாரையும் கிளியும் நாட்டுறு தூது

கண்ணன்  நெடுநாள்  மண்ணிடந்தும்  காணக்  கிடையாக்  கழலுடையார் 
நண்ணும்  ஒற்றி  நகரார்க்கு  நாராய்  சென்று  நவிற்றாயோ 
அண்ணல்  உமது  பவனிகண்ட  அன்று  முதலாய்  இன்றளவும் 
உண்ணும்  உணவோ  டுறக்கமுநீத்  துற்றாள்  என்றிவ்  வொருமொழியே. 
1
மன்னுங்  கருணை  வழிவிழியார்  மதுர  மொழியார்  ஒற்றிநகர்த் 
துன்னும்  அவர்தந்  திருமுன்போய்ச்  சுகங்காள்  நின்று  சொல்லீரோ 
மின்னுந்  தேவர்  திருமுடிமேல்  விளங்குஞ்  சடையைக்  கண்டவள்தன் 
பின்னுஞ்  சடையை  அவிழ்த்தொன்றும்  பேசாள்  எம்மைப்  பிரிந்தென்றே. 
2
வடிக்குந்  தமிழ்த்தீந்  தேன்என்ன  வசனம்  புகல்வார்  ஒற்றிதனில் 
நடிக்குந்  தியாகர்  திருமுன்போய்  நாராய்  நின்று  நவிற்றாயோ 
பிடிக்குங்  கிடையா  நடைஉடைய  பெண்க  ளெல்லாம்  பிச்சிஎன 
நொடிக்கும்  படிக்கு  மிகுங்காம  நோயால்  வருந்தி  நோவதுவே. 
3
மாய  மொழியார்க்  கறிவரியார்  வண்கை  உடையார்  மறைமணக்கும் 
தூய  மொழியார்  ஒற்றியிற்போய்ச்  சுகங்காள்  நின்று  சொல்லீரோ 
நேய  மொழியாள்  பந்தாடாள்  நில்லாள்  வாச  நீராடாள் 
ஏய  மொழியாள்  பாலனமும்  ஏலாள்  உம்மை  எண்ணிஎன்றே. 
4
ஒல்லார்  புரமூன்  றெரிசெய்தார்  ஒற்றி  அமர்ந்தார்  எல்லார்க்கும் 
நல்லார்  வல்லார்  அவர்முன்போய்  நாராய்  நின்று  நவிற்றுதியே 
அல்லார்  குழலாள்  கண்ராம்  ஆற்றில்  அலைந்தாள்  அணங்கனையார் 
பல்லார்  சூழ்ந்து  பழிதூற்றப்  படுத்தாள்  விடுத்தாள்  பாயல்என்றே. 
5
ஓவா  நிலையார்  பொற்சிலையார்  ஒற்றி  நகரார்  உண்மைசொலும் 
தூவாய்  மொழியார்  அவர்முன்போய்ச்  சுகங்காள்  நின்று  சொல்லீரோ 
பூவார்  முடியாள்  பூமுடியாள்  போவாள்  வருவாள்  பொருந்துகிலாள் 
ஆவா  என்பாள்  மகளிரொடும்  ஆடாள்  தேடாள்  அனம்என்றே. 
6
வட்ட  மதிபோல்  அழகொழுகும்  வதன  விடங்கர்  ஒற்றிதனில் 
நட்ட  நவில்வார்  அவர்முன்போய்  நாராய்  நின்று  நவிற்றாயோ 
கட்ட  அவிழ்ந்த  குழல்முடியாள்  கடுகி  விழுந்த  கலைபுனையாள் 
முட்ட  விலங்கு  முலையினையும்  மூடாள்  மதனை  முனிந்தென்றே. 
7
வேலை  விடத்தை  மிடற்றணிந்த  வெண்ற்  றழகர்  விண்ணளவும் 
சோலை  மருவும்  ஒற்றியிற்போய்ச்  சுகங்காள்  அவர்முன்  சொல்லீரோ 
மாலை  மனத்தாள்  கற்பகப்பூ  மாலை  தரினும்  வாங்குகிலாள் 
காலை  அறியாள்  பகல்அறியாள்  கங்குல்  அறியாள்  கனிந்தென்றே. 
8
மாண்காத்  தளிர்க்கும்  ஒற்றியினார்  வான  மகளிர்  மங்கலப்பொன் 
நாண்காத்  தளித்தார்  அவர்முன்போய்  நாராய்  நின்று  நவிற்றுதியோ 
பூண்காத்  தளியாள்  புலம்பிநின்றாள்  புரண்டாள்  அயன்மால்  ஆதியராம் 
சேண்காத்  தளிப்போர்  தேற்றுகினும்  தேறாள்  மனது  திறன்என்றே. 
9
தேசு  பூத்த  வடிவழகர்  திருவாழ்  ஒற்றித்  தேவர்புலித் 
தூசு  பூத்த  கீளுடையார்  சுகங்காள்  அவர்முன்  சொல்லீரோ 
மாசு  பூத்த  மணிபோல  வருந்தா  நின்றாள்  மங்கையர்வாய் 
ஏசு  பூத்த  அலர்க்கொடியாய்  இளைத்தாள்  உம்மை  எண்ணிஎன்றே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com