திருவருட்பா  12. காட்சி அற்புதம்

பூணா  அணிபூண்  புயமுடையார்  பொன்னம்  பலத்தார்  பொங்குவிடம் 
ஊணா  உவந்தார்  திருஒற்றி  யூர்வாழ்  வுடையார்  உண்மைசொலி 
நீணால்  இருந்தார்  அவர்இங்கே  நின்றார்  மீட்டும்  நின்றிடவே 
காணா  தயர்ந்தேன்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
1
ஓட்டில்  இரந்துண்  டொற்றியிடை  உற்றார்  உலகத்  துயிரைஎலாம் 
ஆட்டி  நடிப்பார்  ஆலயத்தின்  அருகே  எளிய  ளாம்எனவே 
ஏட்டில்  அடங்காக்  கையறவால்  இருந்தேன்  இருந்த  என்முன்உருக் 
காட்டி  மறைத்தார்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
2
ஈதல்  ஒழியா  வண்கையினார்  எல்லாம்  வல்ல  சித்தர்அவர் 
ஓதல்  ஒழியா  ஒற்றியில்என்  உள்ளம்  உவக்க  உலகம்எலாம் 
ஆதல்  ஒழியா  எழில்உருக்கொண்  டடைந்தார்  கண்டேன்  உடன்காணேன் 
காதல்  ஒழியா  தென்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
3
தொண்டு  புரிவோர்  தங்களுக்கோர்  துணைவர்  ஆவார்  சூழ்ந்துவரி 
வண்டு  புரியுங்  கொன்றைமலர்  மாலை  அழகர்  வல்விடத்தை 
உண்டு  புரியுங்  கருணையினார்  ஒற்றி  யூரர்  ஒண்பதத்தைக் 
கண்டுங்  காணேன்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
4
அடியர்  வருந்த  உடன்வருந்தும்  ஆண்டை  அவர்தாம்  அன்றயனும் 
நெடிய  மாலுங்  காணாத  நிமல  உருவோ  டென்எதிரே 
வடியல்  அறியா  அருள்காட்டி  மறைத்தார்  மருண்டேன்  மங்கைநல்லார் 
கடிய  அயர்ந்தேன்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
5
கொற்றம்  உடையார்  திருஒற்றிக்  கோயில்உடையார்  என்எதிரே 
பொற்றை  மணித்தோட்  புயங்காட்டிப்  போனார்  என்னைப்  புலம்பவைத்துக் 
குற்றம்  அறியேன்  மனநடுக்கங்  கொண்டேன்  உடலங்  குழைகின்றேன் 
கற்றிண்  முலையாய்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
6
ஆல  நிழற்கீழ்  அன்றமர்ந்தார்  ஆதி  நடுவீ  றாகிநின்றார் 
நீல  மிடற்றார்  திருஒற்றி  நியமத்  தெதிரே  நீற்றுருவக் 
கோல  நிகழக்  கண்டேன்பின்  குறிக்கக்  காணேன்  கூட்டுவிக்கும் 
காலம்  அறியேன்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
7
சலங்கா  தலிக்கும்  தாழ்சடையார்  தாமே  தமக்குத்  தாதையனார் 
நிலங்கா  தலிக்கும்  திருஒற்றி  நியமத்  தெதிரே  நின்றனர்காண் 
விலங்கா  தவரைத்  தரிசித்தேன்  மீட்டுங்  காணேன்  மெய்மறந்தேன் 
கலங்கா  நின்றேன்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
8
நிரந்தார்  கங்கை  நீள்சடையார்  நெற்றி  விழியார்  நித்தியனார் 
சிரந்தார்  ஆகப்  புயத்தணிவார்  திருவாழ்  ஒற்றித்  தியாகர்அவர் 
பரந்தார்  கோயிற்  கெதிர்நிற்கப்  பார்த்தேன்  மீட்டும்  பார்ப்பதன்முன் 
கரந்தார்  கலுழ்ந்தேன்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
9
அளித்தார்  உலகை  அம்பலத்தில்  ஆடி  வினையால்  ஆட்டிநின்றார் 
தளித்தார்  சோலை  ஒற்றியிடைத்  தமது  வடிவம்  காட்டியுடன் 
ஒளித்தார்  நானும்  மனம்மயங்கி  உழலா  நின்றேன்  ஒண்தொடிக்கைக் 
களித்தார்  குழலாய்  என்னடிநான்  கனவோ  நனவோ  கண்டதுவே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com