திருவருட்பா  88. நெஞ்சொடு நெகிழ்தல்

சீர்தரு  வார்புகழ்ப்  பேர்தரு  வார்அருள்  தேன்தருவார் 
ஊர்தரு  வார்மதி  யுந்தரு  வார்கதி  யுந்தருவார் 
ஏர்தரு  வார்தரு  வார்ஒற்றி  யூர்எம்  இறைவர்அன்றி 
யார்தரு  வார்நெஞ்ச  மேஇங்கும்  அங்கும்  இயம்புகவே. 
1
வாடக்கற்  றாய்இஃ  தென்னைநெஞ்  சேயிசை  வாய்ந்தசிந்து 
பாடக்கற்  றாய்இலை  பொய்வேடம்  கட்டிப்  படிமிசைக்கூத் 
தாடக்கற்  றாய்இலை  அந்தோ  பொருள்உனக்  கார்தருவார் 
நீடக்கற்  றார்புகழ்  ஒற்றிஎம்  மானை  நினைஇனியே. 
2
சோடில்லை  மேல்வெள்ளைச்  சொக்காய்  இலைநல்ல  சோமன்இல்லை 
பாடில்லை  கையிற்  பணமில்லை  தேகப்  பருமன்இல்லை 
வீடில்லை  யாதொரு  வீறாப்பும்  இல்லை  விவாகமது 
நாடில்லை  நீநெஞ்ச  மேஎந்த  ஆற்றினில்  நண்ணினையே. 
3
நேரா  அழுக்குத்  துணியாகில்  உன்றனை  நேரில்கண்டும் 
பாரா  தவர்என  நிற்பார்  உடுத்தது  பட்டெனிலோ 
வாரா  திருப்பதென்  வாரும்என்  பார்இந்த  வஞ்சகர்பால் 
சேராது  நன்னெஞ்ச  மேஒற்றி  யூரனைச்  சேர்விரைந்தே. 
4
பொய்விரிப்  பார்க்குப்  பொருள்விரிப்  பார்நற்  பொருட்பயனாம் 
மெய்விரிப்  பார்க்கிரு  கைவிரிப்  பார்பெட்டி  மேவுபணப் 
பைவிரிப்  பார்அல்குற்  பைவிரிப்  பார்க்கவர்  பாற்பரவி 
மைவிரிப்  பாய்மன  மேஎன்கொ  லோநின்  மதியின்மையே. 
5
வாழைக்  கனிஉண  மாட்டாது  வானின்  வளர்ந்துயர்ந்த 
தாழைக்  கனிஉணத்  தாவுகின்  றோரில்  சயிலம்பெற்ற 
மாழைக்  கனிதிகழ்  வாமத்தெம்  மான்தொண்டர்  மாட்டகன்றே 
ஏழைக்  கனிகர்  உளத்தினர்  பாற்சென்ற  தென்னைநெஞ்சே. 
6
காயார்  சரிகைக்  கலிங்கம்உண்  டேல்இக்  கலிங்கங்கண்டால் 
நீயார்நின்  பேர்எது  நின்ஊர்  எதுநின்  நிலையெதுநின் 
தாயார்நின்  தந்தை  எவன்குலம்  ஏதென்பர்  சாற்றும்அவ்வல் 
வாயார்  இடஞ்செலல்  நெஞ்சே  விடைதர  வல்லைஅன்றே. 
எண்சீர்க்  கழிநெடிலடி  ஆசிரிய  விருத்தம் 
7
துட்ட  வஞ்சக  நெஞ்சக  மேஒன்று  சொல்லக்  கேள்கடல்  சூழ்உல  கத்திலே 
இட்டம்  என்கொல்  இறையள  வேனும்ஓர்  இன்பம்  இல்லை  இடைக்கிடை  இன்னலால் 
நட்ட  மிக்குறல்  கண்டுகண்  டேங்கினை  நாணு  கின்றிலை  நாய்க்குங்  கடையைநீ 
பட்ட  வன்மைகள்  எண்ணில்  எனக்குடல்  பதைக்கும்  உள்ளம்  பகீல்என  ஏங்குமே. 
அறுசீர்க்  கழிநெடிலடி  ஆசிரிய  விருத்தம் 
8
பெரியபொருள்  எவைக்கும்முதற்  பெரும்பொருளாம்  அரும்பொருளைப்  பேசற்கொண்ணாத் 
துரியநிலை  அநுபவத்தைச்  சுகமயமாய்  எங்குமுள்ள  தொன்மை  தன்னை 
அரியபரம்  பரமான  சிதம்பரத்தே  நடம்புரியும்  அமுதை  அந்தோ 
உரியபர  கதிஅடைதற்  குன்னினையேன்  மனனேநீ  உய்கு  வாயே. 
9
சொன்னிலைக்கும்  பொருணிலைக்கும்  தூரியதாய்  ஆனந்தச்  சுடராய்  அன்பர் 
தன்னிலைக்கும்  சென்னிலைக்கும்  அண்மையதாய்  அருள்பழுக்கும்  தருவாய்  என்றும் 
முன்னிலைக்கும்  நின்னிலைக்கும்  காண்பதரிதாய்  மூவாத  முதலாய்ச்  சுத்த 
நன்னிலைக்கும்  நிலையாய  பசுபதியை  மனனேநீ  நவின்றி  டாயே. 
10
மண்முகத்தில்  பல்விடய  வாதனையால்  மனனேநீ  வருந்தி  அந்தோ 
புண்முகத்தில்  சுவைவிரும்பும்  எறும்பெனவா  ளாநாளைப்  போக்கு  கின்றாய் 
சண்முகத்தெம்  பெருமானை  ஐங்கரனை  நடராஜத்  தம்பி  ரானை 
உண்முகத்தில்  கருதிஅநு  பவமயமாய்  இருக்கிலைநின்  உணர்ச்சி  என்னே. 
11
மால்எடுத்துக்  கொண்டுகரு  மால்ஆகித்  திரிந்தும்உளம்  மாலாய்ப்  பின்னும் 
வால்எடுத்துக்  கொண்டுநடந்  தணிவிடையாய்ச்  சுமக்கின்றான்  மனனே  நீஅக் 
கால்எடுத்துக்  கொண்டுசுமந்  திடவிரும்பு  கிலைஅந்தோ  கருதும்  வேதம் 
நால்எடுத்துக்  கொண்டுமுடி  சுமப்பதையும்  அறிகிலைநின்  நலந்தான்  என்னே. 
ஆசிரியத்  துறை 
12
உலகம்  ஏத்திநின்  றோங்க  ஓங்கிய  ஒளிகொள்  மன்றிடை  அளிகொள்மாநடம் 
இலகு  சேவடிக்கே  அன்பு  கூர்ந்திலை  ஏழை  நெஞ்சே 
திலக  வாணுத  லார்க்கு  ழன்றனை  தீமை  யேபுரிந்  தாய்வி  ரிந்தனை 
கலக  மேகனிந்தாய்  என்னை  காண்நின்  கடைக்க  ருத்தே. 
13

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com