
சரதத் தால்அன்பர் சார்ந்திடும் நின்திரு
விரதத் தால்அன்றி வேறொன்றில் தீருமோ
பரதத் தாண்டவ னேபரி திப்புரி
வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே.
வேத னேனும்வி லக்குதற் பாலனோ
தீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய
நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல்
நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே.
அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த
விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே
வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள்
மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ.
மாலும் நான்குவ தனனும் மாமறை
நாலும் நாடரு நம்பர னேஎவ
ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின்
ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே.
தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
வைய நாயக வானவர் நாயக
தையல் நாயகி சார்ந்திடும் நாயக
உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல்
வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே.
கல்லை வில்லில்க ணித்தருள் செய்ததோர்
எல்லை இன்றிஎ ழும்இன்ப வெள்ளமே
இல்லை இல்லைநின் இன்னருள் இல்லையேல்
தொல்லை நோயின்தொ டக்கது நீங்கலே.
நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல்
வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி
உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப்
பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது
நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ.
சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய
தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு
உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல்
நைவ தற்குந ணுகுவ நோய்களே.



