
துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
சுயம்பிர காசமே அமுதில்
கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
கடவுளே கண்ணுதற் கரும்பே
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
கொடுந்துய ரால்அலைந் தையா
முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
மூடன்என் றிகழ்வது முறையோ.
இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
ஏன்றுகொள் பவரிலை அந்தோ
அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
செல்வமே சிவபரம் பொருளே.
பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
புத்தமு தேகுணப் பொருப்பே
இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
இன்பமே என்பெருந் துணையே
அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
அண்ணலே நின்அடிக் கபயம்
மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
றணுத்துணைத் திவலையே எனினும்
ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
இல்லையேல் என்செய்கேன் எளியேன்
நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
நினைப்பரும் நிலைமையை அன்பர்
வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
விமலனே விடைப்பெரு மானே.
பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
அருமையில் பிரமன் ஆதிய தேவர்
அடைந்தநற் செல்வமே அமுதே
இருமையிற் பயனும் நின்திரு அருளே
என்றுநின் அடைக்கலம் ஆனேன்
கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
களைகளைந் தெனைவிளைத் தருளே.
விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய
விருப்பினை நெருப்புறழ் துன்பின்
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால்
என்செய்கேன் என்பிழை பொறுத்துத்
தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின்
தனைஅன்றி அறிந்திலன் தமியேன்
கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே
கிளர்தரும் சிற்பர சிவனே.
சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
தேவனே தில்லைஅம் பலத்தே
தற்பர நடஞ்செய் தாணுவே அகில
சராசர காரணப் பொருளே
அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
அலைதரு கின்றனன் எளியேன்
கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
களிப்புடன் ஆடுவ தென்றோ.
என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
என்றுநின் உருவுகண் டிடும்நாள்
என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
என்றென தகத்துயர் அறும்நாள்
மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
வானவர் கனவினும் தோன்றா
தொன்றுறும் ஒன்றே அருண்மய மான
உத்தம வித்தக மணியே.
வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப
விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ
அத்தக வேனை எடுப்பவர் நின்னை
அன்றிஎங் கணும்இலை ஐயா
மத்தகக் கரியின் உரிபுனை பவள
வண்ணனே விண்ணவர் அரசே
புத்தக நிறைவின் அடியவர் வேண்டும்
பொருள்எலாம் புரிந்தருள் பவனே.
அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
வானமும் தேடினும் இன்றே
இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
இணைதுணை எனநினைந் துற்றேன்
மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
வாழிய அருட்பெருந் துறையே.



