திருவருட்பா  4. நமச்சிவாய ஸங்கீர்த்தன லகிரி

சொல்அ  வாவிய  தொண்டர்தம்  மனத்தில் 
சுதந்த  ரங்கொடு  தோன்றிய  துணையைக் 
கல்அ  வாவிய  ஏழையேன்  நெஞ்சும் 
கரைந்து  வந்திடக்  கலந்திடும்  களிப்பைச் 
செல்அ  வாவிய  பொழில்திரு  வொற்றித் 
தேனைத்  தில்லைச்சிற்  றம்பலத்  தாடும் 
நல்ல  வாழ்வினை  நான்மறைப்  பொருளை 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
1
அட்ட  மூர்த்தம  தாகிய  பொருளை 
அண்டர்  ஆதியோர்  அறிகிலாத்  திறத்தை 
விட்ட  வேட்கையர்க்  கங்கையில்  கனியை 
வேத  மூலத்தை  வித்தக  விளைவை 
எட்ட  ரும்பர  மானந்த  நிறைவை 
எங்கும்  ஆகிநின்  றிலங்கிய  ஒளியை 
நட்டம்  ஆடிய  நடனநா  யகத்தை 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
2
உம்பர்  வான்துயர்  ஒழித்தருள்  சிவத்தை 
உலகெ  லாம்புகழ்  உத்தமப்  பொருளைத் 
தம்ப  மாய்அகி  லாண்டமும்  தாங்கும் 
சம்பு  வைச்சிவ  தருமத்தின்  பயனைப் 
பம்பு  சீரருள்  பொழிதரு  முகிலைப் 
பரம  ஞானத்தைப்  பரமசிற்  சுகத்தை 
நம்பி  னோர்களை  வாழ்விக்கும்  நலத்தை 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
3
மாலின்  உச்சிமேல்  வதிந்தமா  மணியை 
வழுத்தும்  நாஅகம்  மணக்கும்நன்  மலரைப் 
பாலின்  உள்இனித்  தோங்கிய  சுவையைப் 
பத்தர்  தம்உளம்  பரிசிக்கும்  பழத்தை 
ஆலின்  ஓங்கிய  ஆனந்தக்  கடலை 
அம்ப  லத்தில்ஆம்  அமுதைவே  தங்கள் 
நாலின்  ஒற்றியூர்  அமர்ந்திடும்  சிவத்தை 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
4
உண்ணி  றைந்தெனை  ஒளித்திடும்  ஒளியை 
உண்ண  உண்ணமேல்  உவட்டுறா  நறவைக் 
கண்ணி  றைந்ததோர்  காட்சியை  யாவும் 
கடந்த  மேலவர்  கலந்திடும்  உறவை 
எண்ணி  றைந்தமால்  அயன்முதல்  தேவர் 
யாரும்  காண்கிலா  இன்பத்தின்  நிறைவை 
நண்ணி  ஒற்றியூர்  அமர்ந்தருள்  சிவத்தை 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
5
திக்கு  மாறினும்  எழுகடல்  புவிமேல் 
சென்று  மாறினும்  சேண்விளங்  கொளிகள் 
உக்கு  மாறினும்  பெயல்இன்றி  உலகில் 
உணவு  மாறினும்  புவிகளோர்  ஏழும் 
மிக்கு  மாறினும்  அண்டங்கள்  எல்லாம் 
விழுந்து  மாறினும்  வேதங்கள்  உணரா 
நக்கன்  எம்பிரான்  அருள்திருப்  பெயராம் 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
6
பெற்ற  தாய்தனை  மகமறந்  தாலும் 
பிள்ளை  யைப்பெறும்  தாய்மறந்  தாலும் 
உற்ற  தேகத்தை  உயிர்மறந்  தாலும் 
உயிரை  மேவிய  உடல்மறந்  தாலும் 
கற்ற  நெஞ்சகம்  கலைமறந்  தாலும் 
கண்கள்  நின்றிமைப்  பதுமறந்  தாலும் 
நற்ற  வத்தவர்  உள்ளிருந்  தோங்கும் 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
7
உடைஉ  டுத்திட  இடைமறந்  தாலும் 
உலகு  ளோர்பசிக்  குணமறந்  தாலும் 
படையெ  டுத்தவர்  படைமறந்  தாலும் 
பரவை  தான்அலைப்  பதுமறந்  தாலும் 
புடைஅ  டுத்தவர்  தமைமறந்  தாலும் 
பொன்னை  வைத்தஅப்  புதைமறந்  தாலும் 
நடைஅ  டுத்தவர்  வழிமறந்  தாலும் 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
8
வன்மை  செய்திடும்  வறுமைவந்  தாலும் 
மகிழ்வு  செய்பெரு  வாழ்வுவந்  தாலும் 
புன்மை  மங்கையர்  புணர்ச்சிநேர்ந்  தாலும் 
பொருந்தி  னாலும்நின்  றாலும்சென்  றாலும் 
தன்மை  இல்லவர்  சார்பிருந்  தாலும் 
சான்ற  மேலவர்  தமைஅடைந்  தாலும் 
நன்மை  என்பன  யாவையும்  அளிக்கும் 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
9
இன்னும்  பற்பல  நாளிருந்  தாலும் 
இக்க  ணந்தனி  லேஇறந்  தாலும் 
துன்னும்  வான்கதிக்  கேபுகுந்  தாலும் 
சோர்ந்து  மாநர  கத்துழன்  றாலும் 
என்ன  மேலும்இங்  கெனக்குவந்  தாலும் 
எம்பி  ரான்எனக்கு  யாதுசெய்  தாலும் 
நன்னர்  நெஞ்சகம்  நாடிநின்  றோங்கும் 
நமச்சி  வாயத்தை  நான்மற  வேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com