
ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே.
ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்
பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
நாடு நாடிடில் நாடு நம்மதே.
நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால்
அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார்
தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே.
தம்ப லம்பெறும் தைய லார்கணால்
வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.
செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே.
இல்லை உண்டென எய்தி ஐயுறும்
கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.
மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
ஓலை காட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
பாலை சேர்படம் பக்க நாதர்தம்
காலை நாடிநற் கதியின் நிற்பையே.
நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
போற்றி ஒற்றியூர்ப் புண்ணி யன்திரு
நீற்றி னான்தனை நினைந்து நிற்பையேல்
தோற்ற ரும்பரஞ் சோதி நல்அருள்
ஊற்றெ ழும்கடல் ஒக்க நெஞ்சமே.



