
தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே.
சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி தன்னை அன்பர்
துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத்
திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்.
கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.



