Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 599

பொருட்பால்அரசியல்60. ஊக்கமுடைமை

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.

pariyatu kUrngkOTTa tAyinum yAnaiverUum pulitAk kuRin

Ananthu

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• பரியது கூர்ங்கோட்டதாயினும் யானை = பேருடம்பும் கூரிய தந்தங்களும் கொண்டிருந்தாலும் யானையானது,• புலி தாக்குறின் = அஞ்சாத ஊக்கத்தோடு தாக்கும் புலியைக் கண்டால்,• வெரூஉம் = அஞ்சி நடுங்கும்.எளிய விளக்கம்:யானை பேருடம்பையும் கூர்மையான தந்தங்களையும் பெற்றிருந்தாலும், மிகுந்த ஊக்கத்துடன் பாயும் புலியைக் கண்டால் அஞ்சி நடுங்கும்; அதுபோலவே, உடல்பலத்தை விட மன ஊக்கமே உண்மையான வலிமையாகும்.

மு.வரதராசன்

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

பரிமேலழகர்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும். (பேருடம்பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.)

சாலமன் பாப்பையா

யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

Meaning in English

Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmed

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout