செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
seviyuNaviR kELvi yuTaiyAr aviyuNavinAnRArO Toppar nilattu
Keerthana Shriram
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• செவி உணவின் கேள்வி உடையார் = சான்றோர்களின் நற்போதனைகளைத் தம் காதுகளால் கேட்டுப் பெறும் 'கேள்வி ஞானம்' என்னும் செவி உணவை அருந்துகின்ற மனிதர்கள்,• நிலத்து = இந்த பூவுலகில் வாழ்கின்ற மனிதர்களாய் இருந்த போதிலும் கூட,• அவி உணவின் = வேள்வித் தீயில் இடப்படும் புனிதமான அவி உணவை அருந்தி இன்புறும்• ஆன்றாரொடு ஒப்பர் = விண்ணுலகத்துத் தேவலோக தேவர்களுக்குச் சமமான மேன்மை உடையவர்கள் ஆவர்.எளிய விளக்கம்:சான்றோர்களின் அருள்மொழிகளைக் காதுகளால் கேட்டுப் பெறும் கேள்வி ஞானம் உடையவர்கள், இந்த பூவுலகில் வாழ்கின்ற போதிலும் கூட, விண்ணுலகத்தில் அவி உணவை உண்டு வாழும் தேவர்களுக்குச் சமமாகப் போற்றப்படுவார்கள்.
மு.வரதராசன்
செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
பரிமேலழகர்
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
Meaning in English
Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share





