அப்பா  எனக்கெய்ப்பில்  வைப்பாய்  இருக்கின்ற  ஆரமுதே 
இப்பாரில்  என்தன்னை  நீயே  வருவித்  திசைவுடனே 
தப்பாத  தந்திரம்  மந்திரம்  யாவையும்  தந்துலகில் 
வெப்பா  னதுதவிர்த்  தைந்தொழில்  செய்ய  விதித்தனையே. 
விதித்தனை  என்னைநின்  தன்மக  னாக  விதித்துளத்தே 
பதித்தனை  என்னுட்  பதிந்தனை  சிற்றம்  பலநடமும் 
உதித்தொளிர்  பொன்னம்  பலநட  மும்ஒருங்  கேஎனக்கே 
கதித்தழி  யாமையும்  இன்பமும்  கைவரக்  காட்டினையே. 
காட்டினை  ஞான  அமுதளித்  தாய்நற்  கனகசபை 
ஆட்டினை  என்பக்கம்  ஆக்கினை  மெய்ப்பொருள்  அன்றுவந்து 
நீட்டினை  என்றும்  அழியா  வரந்தந்து  நின்சபையில் 
கூட்டினை  நான்முனம்  செய்தவம்  யாதது  கூறுகவே. 
கூறுகந்  தாய்சிவ  காமக்  கொடியைக்  கொடியில்வெள்ளை 
ஏறுகந்  தாய்என்னை  ஈன்றுகந்  தாய்மெய்  இலங்குதிரு 
நீறுகந்  தாய்உல  கெல்லாம்  தழைக்க  நிமிர்சடைமேல் 
ஆறுகந்  தாய்மன்றில்  ஆட்டுகந்  தாய்என்னை  ஆண்டவனே. 
ஆண்டவ  னேதிரு  அம்பலத்  தேஅரு  ளால்இயற்றும் 
தாண்டவ  னேஎனைத்  தந்தவ  னேமுற்றுந்  தந்தவனே 
நீண்டவ  னேஉயிர்க்  கெல்லாம்  பொதுவினில்  நின்றவனே 
வேண்ட  அனேக  வரங்கொடுத்  தாட்கொண்ட  மேலவனே. 
மேலவ  னேதிரு  அம்பலத்  தாடல்  விளக்கும்மலர்க் 
காலவ  னேகனல்  கையவ  னேநுதற்  கண்ணவனே 
மாலவன்  ஏத்தும்  சிவகாம  சுந்தர  வல்லியைஓர் 
பாலவ  னேஎனைப்  பாலகன்  ஆக்கிய  பண்பினனே. 
வாட்டமெல்  லாந்தவிர்ந்  தேன்அருட்  பேரொளி  வாய்க்கப்பெற்றேன் 
கூட்டமெல்  லாம்புகழ்  அம்பல  வாணரைக்  கூடப்பெற்றேன் 
தேட்டமெல்  லாம்வல்ல  சித்திபெற்  றேன்இச்  செகதலத்தே 
ஆட்டமெல்  லாம்விளை  யாடுகின்  றேன்எனக்  கார்சரியே. 
நான்செய்த  புண்ணியம்  யார்செய்  தனர்இந்த  நானிலத்தே 
வான்செய்த  தேவரும்  காணாத  காட்சி  மகிழ்ந்துகண்டேன் 
ஊன்செய்த  மெய்யும்  உயிரும்  உணர்வும்  ஒளிமயமாக் 
கோன்செய  வேபெற்றுக்  கொண்டேன்உண்  டேன்அருட்  கோன்அமுதே. 
எனையான்  மதித்துப்  புகல்கின்ற  தன்றிஃ  தெந்தைபிரான் 
தனையான்  மதித்திங்குப்  பெற்றநல்  வாழ்வது  சாற்றுகின்றேன் 
வினையான்  மெலிந்த  மெலிவைஎல்  லாம்விரைந்  தேதவிர்த்துத் 
தனையான்  புணர்ந்திடச்  சாகா  வரத்தையும்  தந்தனனே. 
சிற்றம்  பலத்தைத்  தெரிந்துகொண்  டேன்எம்  சிவன்அருளால் 
குற்றம்  பலவும்  தவிர்ந்துநின்  றேன்எண்  குணக்குன்றிலே 
வெற்றம்பல்  செய்தவர்  எல்லாம்  விரைந்து  விரைந்துவந்தே 
நற்றம்  பலம்தரு  வாய்என்கின்  றார்இந்த  நானிலத்தே. 
ஒன்றுகண்  டேன்திரு  அம்பலத்  தேஒளி  ஓங்குகின்ற 
நன்றுகண்  டேன்உல  கெல்லாம்  தழைக்க  நடம்புரிதல் 
இன்றுகண்  டேன்என்றும்  சாகா  வரத்தை  எனக்கருள 
மன்றுகண்  டார்க்கிந்த  வாழ்வுள  தென்று  மகிழ்ந்தனனே. 

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com