காதல்கைம்  மிகுந்த  தென்செய்வேன்  எனைநீ 
கண்டுகொள்  கணவனே  என்றாள் 
ஓதலுன்  புகழே  அன்றிநான்  ஒன்றும் 
உவந்திலேன்  உண்மையீ  தென்றாள் 
பேதைநான்  பிறிதோர்  புகலிலேன்  செய்த 
பிழையெலாம்  பொறுத்தருள்  என்றாள் 
மாதய  வுடைய  வள்ளலே  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
மயங்கினேன்  எனினும்  வள்ளலே  உனைநான் 
மறப்பனோ  கனவினும்  என்றாள் 
உயங்கினேன்  உன்னை  மறந்திடில்  ஐயோ 
உயிர்தரி  யாதெனக்  கென்றாள் 
கயங்கினேன்  கயங்கா  வண்ணநின்  கருணைக் 
கடலமு  தளித்தருள்  என்றாள் 
வயங்குசிற்  சபையில்  வரதனே  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
அஞ்சல்என்  றெனைஇத்  தருணநீ  வந்தே 
அன்பினால்  அணைத்தருள்  என்றாள் 
பஞ்சுபோல்  பறந்தேன்  அய்யவோ  துன்பம் 
படமுடி  யாதெனக்  கென்றாள் 
செஞ்செவே  எனது  கருத்தெலாம்  உனது 
திருவுளம்  அறியுமே  என்றாள் 
வஞ்சகம்  அறியா  வள்ளலே  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
பூமியோ  பொருளோ  விரும்பிலேன்  உன்னைப் 
புணர்ந்திட  விரும்பினேன்  என்றாள் 
காமிஎன்  றெனைநீ  கைவிடேல்  காமக் 
கருத்தெனக்  கில்லைகாண்  என்றாள் 
சாமிநீ  வரவு  தாழ்த்திடில்  ஐயோ 
சற்றுநான்  தரித்திடேன்  என்றாள் 
மாமிகு  கருணை  வள்ளலே  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
அடுத்துநான்  உன்னைக்  கலந்தனு  பவிக்க 
ஆசைமேற்  பொங்கிய  தென்றாள் 
தடுத்திட  முடியா  தினிச்சிறு  பொழுதும் 
தலைவனே  தாழ்த்திடேல்  என்றாள் 
தொடுத்துல  குள்ளார்  தூற்றுதல்  வாயால் 
சொலமுடி  யாதெனக்  கென்றாள் 
மடுத்தவெந்  துயர்தீர்த்  தெடுத்தருள்  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
தடுத்திடல்  வல்லார்  இல்லைநின்  அருளைத் 
தருகநற்  றருணம்ஈ  தென்றாள் 
கொடுத்திடில்  ஐயோ  நின்னருட்  பெருமை 
குறையுமோ  குறைந்திடா  தென்றாள் 
நடுத்தய  விலர்போன்  றிருத்தலுன்  றனக்கு 
ஞாயமோ  நண்பனே  என்றாள் 
வடுத்தினும்  வாயேன்  அல்லன்நான்  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
பொன்செய்  நின்வடிவைப்  புணர்ந்திட  நினைத்தேன் 
பொங்கிய  தாசைமேல்  என்றாள் 
என்செய்வேன்  எனையும்  விழுங்கிய  தையோ 
என்னள  வன்றுகாண்  என்றாள் 
கொன்செயும்  உலகர்  என்னையும்  உனது 
குறிப்பையும்  குறித்திலார்  என்றாள் 
வன்செயும்  அவர்வாய்  ஓய்வதென்  றென்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
மெலிந்தஎன்  உளத்தை  அறிந்தனை  தயவு 
மேவிலை  என்னையோ  என்றாள் 
நலிந்தபோ  தின்னும்  பார்த்தும்என்  றிருத்தல் 
நல்லவர்க்  கடுப்பதோ  என்றாள் 
மலிந்த  இவ்வுலகர்  வாய்ப்பதர்  தூற்ற 
வைத்தல்உன்  மரபல  என்றாள் 
வலிந்தெனைக்  கலந்த  வள்ளலே  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
ஒன்றிலேன்  பிறிதொன்  றுன்னருட்  சோதி 
ஒன்றுற  ஒன்றினேன்  என்றாள் 
நன்றிலேன்  எனினும்  நின்திரு  வடியை 
நம்பினேன்  நயந்தருள்  என்றாள் 
குன்றிலே  இருத்தற்  குரியநான்  துயரக் 
குழியிலே  இருந்திடேன்  என்றாள் 
மன்றிலே  நடஞ்செய்  வள்ளலே  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 
ஆடிய  பாதத்  தழகன்என்  றனைத்தான் 
அன்பினால்  கூடினன்  என்றாள் 
கோடிமா  தவங்கள்  புரியினும்  பிறர்க்குக் 
கூடுதல்  கூடுமோ  என்றாள் 
பாடிய  படிஎன்  கருத்தெலாம்  நிரப்பிப் 
பரிசெலாம்  புரிந்தனன்  என்றாள் 
வாடிய  உளமும்  தளிர்த்தனன்  என்றாள் 
வரத்தினால்  நான்பெற்ற  மகளே. 

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com