திருவருட்பா · 75நற்றாய் கூறல்

அருட்பெருஞ்ஜோதி

1 / 2

காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
உவந்திலேன் உண்மையீ தென்றாள்
பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
மாதய வுடைய வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
1
மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
மறப்பனோ கனவினும் என்றாள்
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
உயிர்தரி யாதெனக் கென்றாள்
கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
கடலமு தளித்தருள் என்றாள்
வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
2
அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
அன்பினால் அணைத்தருள் என்றாள்
பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
படமுடி யாதெனக் கென்றாள்
செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
திருவுளம் அறியுமே என்றாள்
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
3
பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
சற்றுநான் தரித்திடேன் என்றாள்
மாமிகு கருணை வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
4
அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
ஆசைமேற் பொங்கிய தென்றாள்
தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
சொலமுடி யாதெனக் கென்றாள்
மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
5
தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
தருகநற் றருணம்ஈ தென்றாள்
கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
குறையுமோ குறைந்திடா தென்றாள்
நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
ஞாயமோ நண்பனே என்றாள்
வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
6
பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
பொங்கிய தாசைமேல் என்றாள்
என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
என்னள வன்றுகாண் என்றாள்
கொன்செயும் உலகர் என்னையும் உனது
குறிப்பையும் குறித்திலார் என்றாள்
வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
7
மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
மேவிலை என்னையோ என்றாள்
நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
வைத்தல்உன் மரபல என்றாள்
வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
8
ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
நம்பினேன் நயந்தருள் என்றாள்
குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
குழியிலே இருந்திடேன் என்றாள்
மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
9
ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
அன்பினால் கூடினன் என்றாள்
கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
கூடுதல் கூடுமோ என்றாள்
பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout