
கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே
தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே
பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்
தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.
கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.
எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின்
நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே
கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென்
பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே.
பரமான சிதம்பர ஞான சபாபதியே
வரமான எல்லாம் எனக்கீந்தநல் வள்ளலேஎன்
தரமானது சற்றும் குறித்திலை சாமிநின்னை
உரமானஉள் அன்பர்கள் ஏசுவர் உண்மைஈதே.
தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே
காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின்
சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே.
பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.



