திருவருட்பா  33. திருமுன் விண்ணப்பம்

மாழை  மாமணிப்  பொதுநடம்  புரிகின்ற  வள்ளலே  அளிகின்ற 
வாழை  வான்பழச்  சுவைஎனப்  பத்தர்தம்  மனத்துளே  தித்திப்போய் 
ஏழை  நாயினேன்  விண்ணப்பம்  திருச்செவிக்  கேற்றருள்  செயல்வேண்டும் 
கோழை  மானிடப்  பிறப்பிதில்  உன்னருட்  குருஉருக்  கொளுமாறே. 
1
பொன்னின்  மாமணிப்  பொதுநடம்  புரிகின்ற  புண்ணியா  கனித்தோங்கி 
மன்னு  வாழையின்  பழச்சுவை  எனப்பத்தர்  மனத்துளே  தித்திப்போய் 
சின்ன  நாயினேன்  விண்ணப்பம்  திருச்செவி  சேர்த்தருள்  செயல்வேண்டும் 
இன்ன  என்னுடைத்  தேகம்நல்  லொளிபெறும்  இயலருக்  கொளுமாறே. 
2
விஞ்சு  பொன்னணி  அம்பலத்  தருள்நடம்  விளைத்துயிர்க்  குயிராகி 
எஞ்சு  றாதபே  ரின்பருள்  கின்றஎன்  இறைவநின்  அருள்இன்றி 
அஞ்சும்  நாயினேன்  விண்ணப்பம்  திருச்செவி  அமைத்தருள்  செயல்வேண்டும் 
துஞ்சும்  இவ்வுடல்  இம்மையே  துஞ்சிடாச்  சுகஉடல்  கொளுமாறே. 
3
ஓங்கு  பொன்னணி  அம்பலத்  தருள்நடம்  உயிர்க்கெலாம்  ஒளிவண்ணப் 
பாங்கு  மேவநின்  றாடல்செய்  இறைவநின்  பதமலர்  பணிந்தேத்தாத் 
தீங்கு  நாயினேன்  விண்ணப்பம்  திருச்செவி  சேர்த்தருள்  செயல்வேண்டும் 
ஈங்கு  வீழுடல்  இம்மையே  வீழ்ந்திடா  இயலுடல்  உறுமாறே. 
4
இலங்கு  பொன்னணிப்  பொதுநடம்  புரிகின்ற  இறைவஇவ்  வுலகெல்லாம் 
துலங்கும்  வண்ணநின்  றருளுநின்  திருவடித்  துணைதுணை  என்னாமல் 
கலங்கு  நாயினேன்  விண்ணப்பம்  திருச்செவி  கலந்தருள்  செயல்வேண்டும் 
அலங்கும்  இவ்வுடல்  இம்மையே  அழிவுறா  அருள்உடல்  உறுமாறே. 
5
சிறந்த  பொன்னணித்  திருச்சிற்றம்  பலத்திலே  திருநடம்  புரிகின்ற 
அறந்த  வாதசே  வடிமலர்  முடிமிசை  அணிந்தக  மகிழ்ந்தேத்த 
மறந்த  நாயினேன்  விண்ணப்பம்  திருச்செவி  மடுத்தருள்  செயல்வேண்டும் 
பிறந்த  இவ்வுடல்  இம்மையே  அழிவுறாப்  பெருநலம்  பெறுமாறே. 
6
விளங்கு  பொன்னணிப்  பொதுநடம்  புரிகின்ற  விரைமலர்த்  திருத்தாளை 
உளங்கொள்  அன்பர்தம்  உளங்கொளும்  இறைவநின்  ஒப்பிலாப்  பெருந்தன்மை 
களங்கொள்  நாயினேன்  விண்ணப்பம்  திருச்செவி  கலந்தருள்  செயல்வேண்டும் 
துளங்கும்  இவ்வுடல்  இம்மையே  அழிவுறாத்  தொல்லுடல்  உறுமாறே. 
7
வாய்ந்த  பொன்னணிப்  பொதுநடம்  புரிகின்ற  வள்ளலே  மறைஎல்லாம் 
ஆய்ந்தும்  இன்னஎன்  றறிந்திலா  நின்திரு  அடிமலர்  பணியாமல் 
சாய்ந்த  நாயினேன்  விண்ணப்பம்  திருச்செவி  தரித்தருள்  செயல்வேண்டும் 
ஏய்ந்த  இவ்வுடல்  இம்மையே  திருவருள்  இயல்உடல்  உறுமாறே. 
8
மாற்றி  லாதபொன்  னம்பலத்  தருள்நடம்  வயங்கநின்  றொளிர்கின்ற 
பேற்றில்  ஆருயிர்க்  கின்பருள்  இறைவநின்  பெயற்கழல்  கணிமாலை 
சாற்றி  டாதஎன்  விண்ணப்பம்  திருச்செவி  தரித்தருள்  செயல்வேண்டும் 
காற்றில்  ஆகிய  இவ்வுடல்  இம்மையே  கதியுடல்  உறுமாறே. 
9
தீட்டு  பொன்னணி  அம்பலத்  தருள்நடம்  செய்துயிர்த்  திரட்கின்பம் 
காட்டு  கின்றதோர்  கருணையங்  கடவுள்நின்  கழலிணை  கருதாதே 
நீட்டு  கின்றஎன்  விண்ணப்பம்  திருச்செவி  நேர்ந்தருள்  செயல்வேண்டும் 
வாட்டும்இவ்வுடல்  இம்மையே  அழிவுறா  வளமடைந்  திடுமாறே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com