திருவருட்பா  28. அபயத் திறன்

ஆடக  மணிப்பொற்  குன்றமே  என்னை 
ஆண்டுகொண்  டருளி  பொருளே 
வீடகத்  தேற்றும்  விளக்கமே  விளக்கின் 
மெய்யொளிக்  குள்ளொளி  வியப்பே 
வாடகச்  சிறியேன்  வாட்டங்கள்  எல்லாம் 
தவிர்த்தருள்  வழங்கிய  மன்றில் 
நாடகக்  கருணை  நாதனே  உன்னை 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
1
வட்டவான்  சுடரே  வளரொளி  விளக்கே 
வயங்குசிற்  சோதியே  அடியேன் 
இட்டமே  இட்டத்  தியைந்துளே  கலந்த 
இன்பமே  என்பெரும்  பொருளே 
கட்டமே  தவிர்த்திங்  கென்னைவாழ்  வித்த 
கடவுளே  கனகமன்  றகத்தே 
நட்டமே  புரியும்  பேரரு  ளரசே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
2
புல்லவா  மனத்தேன்  என்னினும்  சமயம் 
புகுதவா  பொய்ந்நெறி  ஒழுக்கம் 
சொல்லவா  பிறரைத்  துதிக்கவா  சிறிதோர் 
சொப்பனத்  தாயினும்  நினையேன் 
கல்லவா  மனத்தோர்  உறவையுங்  கருதேன் 
கனகமா  மன்றிலே  நடிக்கும் 
நல்லவா  எல்லாம்  வல்லவா  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
3
புண்படா  உடம்பும்  புரைபடா  மனமும் 
பொய்படா  ஒழுக்கமும்  பொருந்திக் 
கண்படா  திரவும்  பகலும்நின்  தனையே 
கருத்தில்வைத்  தேத்துதற்  கிசைந்தேன் 
உண்பனே  எனினும்  உடுப்பனே  எனினும் 
உலகரை  நம்பிலேன்  எனது 
நண்பனே  நலஞ்சார்  பண்பனே  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
4
புண்ணிலே  புகுந்த  கோல்எனத்  துயரம் 
புகுந்தெனைக்  கலக்கிய  போதும் 
கண்ணிலே  எனது  கருத்திலே  கலந்த 
கருத்தனே  நின்றனை  அல்லால் 
மண்ணிலே  வயங்கும்  வானிலே  பிறரை 
மதித்திலேன்  மதிக்கின்றார்  தமையும் 
நண்ணிலேன்  வேறொன்  றெண்ணிலேன்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
5
ஊன்பெறும்  உயிரும்  உணர்ச்சியும்  அன்பும் 
ஊக்கமும்  உண்மையும்  என்னைத் 
தான்பெறு  தாயும்  தந்தையும்  குருவும் 
தனிப்பெருந்  தெய்வமுந்  தவமும் 
வான்பெறு  பொருளும்  வாழ்வும்நற்  றுணையும் 
மக்களும்  மனைவியும்  உறவும் 
நான்பெறு  நண்பும்  யாவும்நீ  என்றே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
6
வாட்டமும்  துயரும்  அச்சமும்  தவிர்த்தென் 
வடிவமும்  வண்ணமும்  உயிரும் 
தேட்டமும்  நீயே  கொண்டுநின்  கருணைத் 
தேகமும்  உருவும்மெய்ச்  சிவமும் 
ஈட்டமும்  எல்லாம்  வல்லநின்  னருட்பே 
ரின்பமும்  அன்பும்மெய்ஞ்  ஞான 
நாட்டமும்  கொடுத்துக்  காப்பதுன்  கடன்நான் 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
7
வம்பனேன்  பிறர்போல்  வையமும்  வானும் 
மற்றவும்  மதித்திலேன்  மதஞ்சார் 
உம்பனேர்  அகங்கா  ரந்தவிர்ந்  தெல்லா 
உலகமும்  வாழ்கவென்  றிருந்தேன் 
செம்பொனே  கருணைத்  தெய்வமே  எல்லாம் 
செயவல்ல  சித்தனே  சிவனே 
நம்பனே  ஞான  நாதனே  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
8
ஆயகால்  இருந்தும்  நடந்திட  வலியில் 
லாமையால்  அழுங்குவார்  எனஉண் 
மேயகால்  இருந்தும்  திருவருள்  உறஓர் 
விருப்பிலா  மையின்மிக  மெலிந்தேன் 
தீயகான்  விலங்கைத்  தூயமா  னிடஞ்செய் 
சித்தனே  சத்திய  சபைக்கு 
நாயகா  உயிர்க்கு  நயகா  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
9
அற்றமும்  மறைக்கும்  அறிவிலா  தோடி 
ஆடிய  சிறுபரு  வத்தே 
குற்றமும்  குணங்கொண்  டென்னைஆட்  கொண்ட 
குணப்பெருங்  குன்றமே  குருவே 
செற்றமும்  விருப்பும்  தீர்த்தமெய்த்  தவர்தம் 
சிந்தையில்  இனிக்கின்ற  தேனே 
நற்றக  வுடைய  நாதனே  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
10
படம்புரி  பாம்பிற்  கொடியனேன்  கொடிய 
பாவியிற்  பாவியேன்  தீமைக் 
கிடம்புரி  மனத்தேன்  இரக்கம்ஒன்  றில்லேன் 
என்னினும்  துணைஎந்த  விதத்தும் 
திடம்புரி  நின்பொன்  அடித்துணை  எனவே 
சிந்தனை  செய்திருக்  கின்றேன் 
நடம்புரி  கருணை  நாயகா  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
11
படித்தனன்  உலகப்  படிப்பெலாம்  மெய்ந்நூல் 
படித்தவர்  தங்களைப்  பார்த்து 
நொடித்தனன்  கடிந்து  நோக்கினேன்  காம 
நோக்கினேன்  பொய்யர்தம்  உறவு 
பிடித்தனன்  உலகில்  பேதையர்  மயங்கப் 
பெரியரில்  பெரியர்போல்  பேசி 
நடித்தனன்  எனினும்  நின்னடித்  துணையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
12
பஞ்சுநேர்  உலகப்  பாட்டிலே  மெலிந்த 
பாவியேன்  சாவியே  போன 
புஞ்செயே  அனையேன்  புழுத்தலைப்  புலையேன் 
பொய்யெலாம்  பூரித்த  வஞ்ச 
நெஞ்சினேன்  பாப  நெறியினேன்  சினத்தில் 
நெடியனேன்  கொடியனேன்  காம 
நஞ்சினேன்  எனினும்  அஞ்சினேன்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
13
கயந்துளே  உவட்டும்  காஞ்சிரங்  காயில் 
கடியனேன்  காமமே  கலந்து 
வியந்துளே  மகிழும்  வீணனேன்  கொடிய 
வெகுளியேன்  வெய்யனேன்  வெறியேன் 
மயர்ந்துளேன்  உலக  வாழ்க்கையை  மனையை 
மக்களை  ஒக்கலை  மதித்தே 
நயந்துளேன்  எனினும்  பயந்துளேன்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
14
ஓடினேன்  பெரும்பே  ராசையால்  உலகில் 
ஊர்தொறும்  உண்டியே  உடையே 
தேடினேன்  காமச்  சேற்றிலே  விழுந்து 
தியங்கினேன்  மயங்கினேன்  திகைத்து 
வாடினேன்  சிறிய  வாரியான்  மகிழ்ந்தேன் 
வஞ்சமே  பொருளென  மதித்து 
நாடினேன்  எனினும்  பாடினேன்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
15
காட்டிலே  திரியும்  விலங்கினிற்  கடையேன் 
கைவழக்  கத்தினால்  ஒடிந்த 
ஓட்டிலே  எனினும்  ஆசைவிட்  டறியேன் 
உலுத்தனேன்  ஒருசிறு  துரும்பும் 
ஏட்டிலே  எழுதிக்  கணக்கிட்ட  கொடியேன் 
எச்சிலும்  உமிழ்ந்திடேன்  நரக 
நாட்டிலே  பெரியேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
16
துனித்தவெம்  மடவார்  பகல்வந்த  போது 
துறவியின்  கடுகடுத்  திருந்தேன் 
தனித்திர  வதிலே  வந்தபோ  தோடித் 
தழுவினேன்  தடமுலை  விழைந்தேன் 
இனித்தசொல்  புகன்றேன்  என்பினைக்  கறித்தே 
இடர்ப்பட்ட  நாயென  இளைத்தேன் 
நனித்தவ  றுடையேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
17
தார்த்தட  முலையார்  நான்பல  ரொடுஞ்சார் 
தலத்திலே  வந்தபோ  தவரைப் 
பார்த்திலேன்  வார்த்தை  பகர்ந்திலேன்  தவசுப் 
பாதகப்  பூனைபோல்  இருந்தேன் 
பேர்த்துநான்  தனித்த  போதுபோய்  வலிந்து 
பேசினேன்  வஞ்சரிற்  பெரியேன் 
நார்த்திடர்  உளத்தேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
18
பெண்மையே  விழைந்தேன்  அவர்மனம்  அறியேன் 
பேய்எனப்  பிடித்தனன்  மடவார்க் 
குண்மையே  புகல்வான்  போன்றவர்  தமைத்தொட் 
டுவந்தகங்  களித்தபொய்  யுளத்தேன் 
தண்மையே  அறியேன்  வெம்மையே  உடையேன் 
சாத்திரம்  புகன்றுவாய்  தடித்தேன் 
நண்மையே  அடையேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
19
வன்மையில்  பொருள்மேல்  இச்சைஇல்  லவன்போல் 
வாதிபோல்  வார்த்தைகள்  வழங்கி 
அன்மையில்  பிறர்பால்  உளவினால்  பொருளை 
அடிக்கடி  வாங்கிய  கொடியேன் 
இன்மையுற்  றவருக்  குதவிலேன்  பொருளை 
எனைவிடக்  கொடியருக்  கீந்தேன் 
நன்மையுற்  றறியேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
20
கட்டமே  அறியேன்  அடுத்தவர்  இடத்தே 
காசிலே  ஆசையில்  லவன்போல் 
பட்டமே  காட்டிப்  பணம்பறித்  துழன்றேன் 
பகல்எலாம்  தவசிபோல்  இருந்தேன் 
இட்டமே  இரவில்  உண்டயல்  புணர்ந்தே 
இழுதையிற்  றூங்கினேன்  களித்து 
நட்டமே  புரிந்தேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
21
காணியே  கருதும்  கருத்தினைப்  பிறர்க்குக் 
காட்டிடா  தம்பெலாம்  அடங்கும் 
தூணியே  எனச்சார்ந்  திருந்தனன்  சோற்றுச் 
சுகத்தினால்  சோம்பினேன்  உதவா 
ஏணியே  அனையேன்  இரப்பவர்க்  குமியும் 
ஈந்திலேன்  ஈந்தவன்  எனவே 
நாணிலேன்  உரைத்தேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
22
அடுத்தவர்  மயங்கி  மதித்திட  நினைத்தேன் 
அடிக்கடி  பொய்களே  புனைந்தே 
எடுத்தெடுத்  துரைத்தேன்  எனக்கெதிர்  இலைஎன் 
றிகழ்ந்தனன்  அகங்கரித்  திருந்தேன் 
கொடுத்தவர்  தமையே  மிகவுப  சரித்தேன் 
கொடாதவர்  தமைஇகழ்ந்  துரைத்தேன் 
நடுத்தய  வறியேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
23
எளியவர்  விளைத்த  நிலமெலாங்  கவரும் 
எண்ணமே  பெரிதுளேன்  புன்செய்க் 
களியுணும்  மனையில்  சர்க்கரை  கலந்து 
காய்ச்சுபால்  கேட்டுண்ட  கடையேன் 
துளியவர்க்  குதவேன்  விருப்பிலான்  போலச் 
சுவைபெறச்  சுவைத்தநாக்  குடையேன் 
நளிர்எனச்  சுழன்றேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
24
கொலைபல  புரிந்தே  புலைநுகர்ந்  திருந்தேன் 
கோடுறு  குரங்கினிற்  குதித்தே 
அலைதரு  மனத்தேன்  அறிவிலேன்  எல்லாம் 
அறிந்தவன்  போல்பிறர்க்  குரைத்தேன் 
மலைவுறு  சமய  வலைஅகப்  பட்டே 
மயங்கிய  மதியினேன்  நல்லோர் 
நலையல  எனவே  திரிந்தனன்  எனினும் 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
25
ஈயெனப்  பறந்தேன்  எறும்பென  உழன்றேன் 
எட்டியே  எனமிகத்  தழைத்தேன் 
பேயெனச்  சுழன்றேன்  பித்தனே  எனவாய்ப் 
பிதற்றொடும்  ஊர்தொறும்  பெயர்ந்தேன் 
காயெனக்  காய்த்தேன்  கடையென  நடந்தேன் 
கல்லெனக்  கிடந்தனன்  குரைக்கும் 
நாயெனத்  திரிந்தேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
26
ஒன்றியே  உணவை  உண்டுடல்  பருத்த 
ஊத்தையேன்  நாத்தழும்  புறவே 
வென்றியே  உரைத்து  வினைகளே  விளைத்த 
வீணனேன்  ஊர்தொறுஞ்  சுழன்ற 
பன்றியே  அனையேன்  கட்டுவார்  அற்ற 
பகடெனத்  திரிகின்ற  படிறேன் 
நன்றியே  அறியேன்  என்னினும்  உனையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
27
கவையெலாந்  தவிர்ந்த  வெறுமரம்  அனையேன் 
கள்ளனேன்  கள்ளுண்ட  கடியேன் 
சுவையெலாம்  விரும்பிச்  சுழன்றதோர்  கடையேன் 
துட்டனேன்  தீதெலாந்  துணிந்தேன் 
இவையெலாம்  அந்நாள்  உடையனோ  அலனோ 
இந்தநாள்  இறைவநின்  அருளால் 
நவையெலாம்  தவிர்ந்தேன்  தூயனாய்  நினையே 
நம்பினேன்  கைவிடேல்  எனையே. 
28

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com