திருவருட்பா  13. திருவருள் விழைதல்

செய்வகை  அறியேன்  மன்றுள்மா  மணிநின் 
திருவுளக்  குறிப்பையும்  தெரியேன் 
உய்வகை  அறியேன்  உணர்விலேன்  அந்தோ 
உறுகண்மேல்  உறுங்கொல்என்  றுலைந்தேன் 
மெய்வகை  அடையேன்  வேறெவர்க்  குரைப்பேன் 
வினையனேன்  என்செய  விரைகேன் 
பொய்வகை  உடையேன்  எங்ஙனம்  புகுவேன் 
புலையனேன்  புகல்அறி  யேனே. 
1
அறிவிலேன்  அறிந்தார்க்  கடிப்பணி  புரியேன் 
அச்சமும்  அவலமும்  உடையேன் 
செறிவிலேன்  பொதுவாம்  தெய்வம்நீ  நினது 
திருவுளத்  தெனைநினை  யாயேல் 
எறிவிலேன்  சிறியேன்  எங்ஙனம்  புகுவேன் 
என்செய்வேன்  யார்துணை  என்பேன் 
பிறிவிலேன்  பிரிந்தால்  உயிர்தரிக்  கலன்என் 
பிழைபொறுத்  தருள்வதுன்  கடனே. 
2
உன்கடன்  அடியேற்  கருளல்என்  றுணர்ந்தேன் 
உடல்பொருள்  ஆவியும்  உனக்கே 
பின்கடன்  இன்றிக்  கொடுத்தனன்  கொடுத்த 
பின்னும்நான்  தளருதல்  அழகோ 
என்கடன்  புரிவேன்  யார்க்கெடுத்  துரைப்பேன் 
என்செய்வேன்  யார்துணை  என்பேன் 
முன்கடன்  பட்டார்  போல்மனம்  கலங்கி 
முறிதல்ஓர்  கணம்தரி  யேனே. 
3
தரித்திடேன்  சிறிதும்  தரித்திடேன்  எனது 
தளர்ச்சியும்  துன்பமும்  தவிர்த்தே 
தெரித்திடல்  அனைத்தும்  தெரித்திடல்  வேண்டும் 
தெரித்திடாய்  எனில்இடர்  எனைத்தான் 
எரித்திடும்  அந்தோ  என்செய்வேன்  எங்கே 
எய்துகேன்  யார்துணை  என்பேன் 
திரித்தநெஞ்  சகத்தேன்  சரித்திரம்  அனைத்தும் 
திருவுளம்  தெரிந்தது  தானே. 
4
தான்எனைப்  புணரும்  தருணம்ஈ  தெனவே 
சத்தியம்  உணர்ந்தனன்  தனித்தே 
தேன்உறக்  கருதி  இருக்கின்றேன்  இதுநின் 
திருவுளம்  தெரிந்ததெந்  தாயே 
ஆன்எனக்  கூவி  அணைந்திடல்  வேண்டும் 
அரைக்கணம்  ஆயினும்  தாழ்க்கில் 
நான்இருப்  பறியேன்  திருச்சிற்றம்  பலத்தே 
நடம்புரி  ஞானநா  டகனே. 
5
ஞானமும்  அதனால்  அடைஅனு  பவமும் 
நாயினேன்  உணர்ந்திட  உணர்த்தி 
ஈனமும்  இடரும்  தவிர்த்தனை  அந்நாள் 
இந்தநாள்  அடியனேன்  இங்கே 
ஊனம்ஒன்  றில்லோய்  நின்றனைக்  கூவி 
உழைக்கின்றேன்  ஒருசிறி  தெனினும் 
ஏனென  வினவா  திருத்தலும்  அழகோ 
இறையும்நான்  தரிக்கலன்  இனியே. 
6
இனியநற்  றாயின்  இனியஎன்  அரசே 
என்னிரு  கண்ணினுண்  மணியே 
கனிஎன  இனிக்கும்  கருணையா  ரமுதே 
கனகஅம்  பலத்துறும்  களிப்பே 
துனிஉறு  மனமும்  சோம்புறும்  உணர்வும் 
சோர்வுறு  முகமும்கொண்  டடியேன் 
தனிஉளங்  கலங்கல்  அழகதோ  எனைத்தான் 
தந்தநற்  றந்தைநீ  அலையோ. 
7
தந்தையும்  தாயும்  குருவும்யான்  போற்றும் 
சாமியும்  பூமியும்  பொருளும் 
சொந்தநல்  வாழ்வும்  நேயமும்  துணையும் 
சுற்றமும்  முற்றும்நீ  என்றே 
சிந்தையுற்  றிங்கே  இருக்கின்றேன்  இதுநின் 
திருவுளம்  தெரிந்ததே  எந்தாய் 
நிந்தைசெய்  உலகில்  யான்உளம்  கலங்கல் 
நீதியோ  நின்அருட்  கழகோ. 
8
அழகனே  ஞான  அமுதனே  என்றன் 
அப்பனே  அம்பலத்  தரசே 
குழகனே  இன்பக்  கொடிஉளம்  களிக்கும் 
கொழுநனே  சுத்தசன்  மார்க்கக் 
கழகநேர்  நின்ற  கருணைமா  நிதியே 
கடவுளே  கடவுளே  எனநான் 
பழகநேர்ந்  திட்டேன்  இன்னும்இவ்  வுலகில் 
பழங்கணால்  அழுங்குதல்  அழகோ. 
9
பழம்பிழி  மதுரப்  பாட்டல  எனினும் 
பத்தரும்  பித்தரும்  பிதற்றும் 
கிழம்பெரும்  பாட்டும்  கேட்பதுன்  உள்ளக் 
கிளர்ச்சிஎன்  றறிந்தநாள்  முதலாய் 
வழங்குநின்  புகழே  பாடுறு  கின்றேன் 
மற்றொரு  பற்றும்இங்  கறியேன் 
சழங்குடை  உலகில்  தளருதல்  அழகோ 
தந்தையுந்  தாயும்நீ  அலையோ. 
10
தாயும்என்  ஒருமைத்  தந்தையும்  ஞான 
சபையிலே  தனிநடம்  புரியும் 
தூயநின்  பாதத்  துணைஎனப்  பிடித்தேன் 
தூக்கமும்  சோம்பலும்  துயரும் 
மாயையும்  வினையும்  மறைப்பும்ஆ  ணவமும் 
வளைத்தெனைப்  பிடித்திடல்  வழக்கோ 
நாயினேன்  இனிஓர்  கணந்தரிப்  பறியேன் 
நல்அருட்  சோதிதந்  தருளே. 
11
சோதியேல்  எனைநீ  சோதனை  தொடங்கில் 
சூழ்உயிர்  விடத்தொடங்  குவன்நான் 
நீதியே  நிறைநின்  திருவருள்  அறிய 
நிகழ்த்தினேன்  நிச்சயம்  இதுவே 
ஓதியே  உணர்தற்  கரும்பெரும்  பொருளே 
உயிர்க்குயிர்  ஆகிய  ஒளியே 
ஆதியே  நடுவே  அந்தமே  ஆதி 
நடுஅந்தம்  இல்லதோர்  அறிவே. 
12
இல்லைஉண்  டெணும்இவ்  விருமையும்  கடந்தோர் 
இயற்கையின்  நிறைந்தபே  ரின்பே 
அல்லைஉண்  டெழுந்த  தனிப்பெருஞ்  சுடரே 
அம்பலத்  தாடல்செய்  அமுதே 
வல்லைஇன்  றடியேன்  துயர்எலாம்  தவிர்த்து 
வழங்குக  நின்அருள்  வழங்கல் 
நல்லைஇன்  றலது  நாளைஎன்  றிடிலோ 
நான்உயிர்  தரிக்கலன்  அரசே. 
13
அரைசெலாம்  வழங்கும்  தனிஅர  சதுநின் 
அருளர  செனஅறிந்  தனன்பின் 
உரைசெய்நின்  அருள்மேல்  உற்றபே  ராசை 
உளம்எலாம்  இடங்கொண்ட  தெந்தாய் 
வரைசெயா  மேன்மேல்  பொங்கிவாய்  ததும்பி 
வழிகின்ற  தென்வசங்  கடந்தே 
இரைசெய்என்  ஆவி  தழைக்கஅவ்  வருளை 
ஈந்தருள்  இற்றைஇப்  போதே. 
14
போதெலாம்  வீணில்  போக்கிஏ  மாந்த 
புழுத்தலைப்  புலையர்கள்  புணர்க்கும் 
சூதெலாம்  கேட்குந்  தொறும்உனைப்  பரவும் 
தூயர்கள்  மனம்அது  துளங்கித் 
தாதெலாம்  கலங்கத்  தளருதல்  அழகோ 
தனிஅருட்  சோதியால்  அந்த 
வாதெலாம்  தவிர்த்துச்  சுத்தசன்  மார்க்கம் 
வழங்குவித்  தருளுக  விரைந்தே. 
15
விரைந்துநின்  அருளை  ஈந்திடல்  வேண்டும் 
விளம்பும்இத்  தருணம்என்  உளந்தான் 
கரைந்தது  காதல்  பெருகிமேல்  பொங்கிக் 
கரைஎலாம்  கடந்தது  கண்டாய் 
வரைந்தெனை  மணந்த  வள்ளலே  எல்லாம் 
வல்லவா  அம்பல  வாணா 
திரைந்தஎன்  உடம்பைத்  திருஉடம்  பாக்கித் 
திகழ்வித்த  சித்தனே  சிவனே. 
16
சிவந்திகழ்  கருணைத்  திருநெறிச்  சார்பும் 
தெய்வம்ஒன்  றேஎனும்  திறமும் 
நவந்தரு  நிலைகள்  சுதந்தரத்  தியலும் 
நன்மையும்  நரைதிரை  முதலாம் 
துவந்துவம்  தவிர்த்துச்  சுத்தமா  தியமுச் 
சுகவடி  வம்பெறும்  பேறும் 
தவந்திகழ்  எல்லாம்  வல்லசித்  தியும்நீ 
தந்தருள்  தருணம்ஈ  தெனக்கே. 
17
தருணம்இஞ்  ஞான்றே  சுத்தசன்  மார்க்கத் 
தனிநெறி  உலகெலாம்  தழைப்பக் 
கருணையும்  சிவமே  பொருள்எனக்  கருதும் 
கருத்தும்உற்  றெம்மனோர்  களிப்பப் 
பொருள்நிறை  ஓங்கத்  தெருள்நிலை  விளங்கப் 
புண்ணியம்  பொற்புற  வயங்க 
அருள்நயந்  தருள்வாய்  திருச்சிற்றம்  பலத்தே 
அருட்பெருஞ்  சோதிஎன்  அரசே. 
18
என்உள  வரைமேல்  அருள்ஒளி  ஓங்கிற் 
றிருள்இர  வொழிந்தது  முழுதும் 
மன்உறும்  இதய  மலர்மலர்ந்  ததுநன் 
மங்கல  முழங்குகின்  றனசீர்ப் 
பொன்இயல்  விளக்கம்  பொலிந்தது  சித்திப் 
பூவையர்  புணர்ந்திடப்  போந்தார் 
சொன்னநல்  தருணம்  அருட்பெருஞ்  சோதி 
துலங்கவந்  தருளுக  விரைந்தே. 
19
வந்தருள்  புரிக  விரைந்திது  தருணம் 
மாமணி  மன்றிலே  ஞான 
சுந்தர  வடிவச்  சோதியாய்  விளங்கும் 
சுத்தசன்  மார்க்கசற்  குருவே 
தந்தருள்  புரிக  வரம்எலாம்  வல்ல 
தனிஅருட்  சோதியை  எனது 
சிந்தையில்  புணர்ப்பித்  தென்னொடுங்  கலந்தே 
செய்வித்  தருள்கசெய்  வகையே. 
20

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com