திருவருட்பா  11. ஆன்ம விசாரத் தழுங்கல்

போகமே  விழைந்தேன்  புலைமனச்  சிறியேன்  பூப்பினும்  புணர்ந்தவெம்  பொறியேன் 
ஏகமே  பொருள்என்  றறிந்திலேன்  பொருளின்  இச்சையால்  எருதுநோ  வறியாக் 
காகமேஎனப்போய்ப்பிறர்  தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன் 
மோகமேஉடையேன்  என்னினும்எந்தாய்  முனிந்திடேல்காத்தருள்  எனையே. 
1
பூப்பினும்  பலகால்  மடந்தையர்  தமைப்போய்ப்புணர்ந்தவெம்  புலையனேன்  விடஞ்சார் 
பாப்பினுங்  கொடியர்  உறவையே  விழைந்த  பள்ளனேன்  கள்ளனேன்  நெருக்கும் 
ஆப்பினும்  வலியேன்  அறத்தொழில்  புரியேன்அன்பினால்அடுத்தவர்கரங்கள் 
கூப்பினுங்கூப்பாக்  கொடுங்கையேன்  எனினும்  கோபியேல்  காத்தருள்  எனையே. 
2
விழுத்தலை  நெறியை  விரும்பிலேன்  கரும்பின்  மிகஇனிக்  கின்றநின்  புகழ்கள் 
வழுத்தலை  அறியேன்  மக்களே  மனையே  வாழ்க்கையே  துணைஎனமதித்துக் 
கொழுத்தலை  மனத்துப்  புழுத்தலைப்  புலையேன்  கொக்கனேன்  செக்கினைப்  பலகால் 
இழுத்தலை  எருதேன்  உழத்தலே  உடையேன்  என்னினும்  காத்தருள்  எனையே. 
3
புலைவிலைக்  கடையில்  தலைகுனித்  தலைந்து  பொறுக்கிய  சுணங்கனேன்  புரத்தில் 
தலைவிலை  பிடித்துக்  கடைவிலை  படித்த  தயவிலாச்  சழக்கனேன்  சழக்கர் 
உலைவிலை  எனவே  வியக்கவெந்  தொழிலில்  உழன்றுழன்  றழன்றதோர்  உளத்தேன் 
இலைவிலை  எனக்கென்  றகங்கரித்  திருந்தேன்  என்னினும்  காத்தருள்  எனையே. 
4
கொட்டிலை  அடையாப்  பட்டிமா  டனையேன்  கொட்டைகள்  பரப்பிமேல்  வனைந்த 
கட்டிலை  விரும்பி  அடிக்கடி  படுத்த  கடையனேன்  கங்குலும்  பகலும் 
அட்டிலை  அடுத்த  பூஞையேன்  உணவை  அறவுண்டு  குப்பைமேற்  போட்ட 
நெட்டிலை  அனையேன்  என்னினும்  வேறு  நினைத்திடேல்  காத்தருள்  எனையே. 
5
நேரிழை  யவர்தம்  புணர்முலை  நெருக்கில்  நெருக்கிய  மனத்தினேன்  வீணில் 
போரிழை  வெறியர்  புகழ்பெறு  வெறியேன்  புனைகலை  இலர்க்கொரு  கலையில் 
ஓரிழை  எனினும்  கொடுத்திலேன்  நீள  உடுத்துடுத்  தூர்தொறுந்  திரிந்தேன் 
ஏரிழை  விழைந்து  பூண்டுளங்  களித்தேன்  என்னினும்  காத்தருள்எனையே. 
6
அளத்திலே  படிந்த  துரும்பினும்  கடையேன்அசடனேன்  அறிவிலேன்உலகில் 
குளத்திலே  குளிப்பார்  குளிக்கவெஞ்  சிறுநீர்க்  குழியிலே  குளித்தவெங்  கொடியேன் 
வளத்திலே  பொசித்துத்  தளத்திலே  படுக்க  மனங்கொணட  சிறியேனன்  மாயைக் 
களத்திலே  பயின்ற  உளத்திலே  பெரியன்  என்னினும்  காத்தருள்  எனையே. 
7
தொழுதெலாம்  வல்ல  கடவுளே  நின்னைத்  துதித்திலேன்  தூய்மைஒன்  றறியேன் 
கழுதெலாம்  அனையேன்  இழுதெலாம்  உணவில்  கலந்துணக்  கருதிய  கருத்தேன் 
பழுதெலாம்  புரிந்து  பொழுதெலாம்  கழித்த  பாவியேன்  தீமைகள்  சிறிதும் 
எழுதலாம்  படித்தன்  றெனமிக  உடையேன்  என்னினும்  காத்தருள்  எனையே. 
8
வட்டியே  பெருக்கிக்  கொட்டியே  ஏழை  மனைகவர்  கருத்தினேன்  ஓட்டைச் 
சட்டியே  எனினும்  பிறர்கொளத்  தரியேன்  தயவிலேன்  சூதெலாம்  அடைத்த 
பெட்டியே  நிகர்த்த  மனத்தினேன்  உலகில்  பெரியவர்  மனம்வெறுக்  கச்செய் 
எட்டியே  மண்ணாங்  கட்டியே  அனையேன்  என்னினும்  காத்தருள்  எனையே. 
9
உடுத்திலேம்  சிறிதும்  உண்டிலேம்  எனவந்  தோதிய  வறிஞருக்  கேதும் 
கொடுத்திலேன்  கொடுக்கும்  குறிப்பிலேன்  உலகில்  குணம்பெரி  துடையநல்  லோரை 
அடுத்திலேன்  அடுத்தற்காசையும்  இல்லேன்  அவனிமேல்  நல்லவன்  எனப்பேர் 
எடுத்திலேன்  எனினும்  தெய்வமே  துணைஎன்  றிருக்கின்றேன்  காத்தருள்  எனையே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com