திருவருட்பா  45. திருவருட் பேற்று விழைவு

உலகம்  பரவும்  பரஞ்சோதி  உருவாம்  குருவே  உம்பரிடைக் 
கலகம்  தருசூர்க்  கிளைகளைந்த  கதிர்வேல்  அரசே  கவின்தருசீர்த் 
திலகம்  திகழ்வாள்  நுதற்பரையின்  செல்வப்  புதல்வா  திறல்அதனால் 
இலகும்  கலப  மயிற்பரிமேல்  ஏறும்  பரிசென்  இயம்புகவே. 
1
புகுவா  னவர்தம்  இடர்முழுதும்  போக்கும்  கதிர்வேல்  புண்ணியனே 
மிகுவான்  முதலாம்  பூதம்எலாம்  விதித்தே  நடத்தும்  விளைவனைத்தும் 
தகுவான்  பொருளாம்  உனதருளே  என்றால்  அடியேன்  தனைஇங்கே 
நகுவான்  வருவித்  திருள்நெறிக்கே  நடத்தல்  அழகோ  நவிலாயே. 
2
அழகா  அமலா  அருளாளா  அறிவா  அறிவார்  அகம்மேவும் 
குழகா  குமரா  எனைஆண்ட  கோவே  நின்சீர்  குறியாரைப் 
பழகா  வண்ணம்  எனக்கருளிப்  பரனே  நின்னைப்  பணிகின்றோர்க் 
கழகா  தரவாம்  பணிபுரிவார்  அடியார்க்  கடிமை  ஆக்குகவே. 
3
ஆக்கும்  தொழிலால்  களித்தானை  அடக்குந்  தொழிலால்  அடக்கிப்பின் 
காக்கும்  தொழிலால்  அருள்புரிந்த  கருணைக்  கடலே  கடைநோக்கால் 
நோக்கும்  தொழில்ஓர்  சிறிதுன்பால்  உளதேல்  மாயா  நொடிப்பெல்லாம் 
போக்கும்  தொழில்என்  பால்உண்டாம்  இதற்கென்  புரிவேன்  புண்ணியனே. 
4
புரிவேன்  விரதம்  தவந்தானம்  புரியா  தொழிவேன்  புண்ணியமே 
பரிவேன்  பாவம்  பரிவேன்இப்  பரிசால்  ஒன்றும்  பயன்காணேன் 
திரிவேன்  நினது  புகழ்பாடிச்  சிறியேன்  இதனைத்  தீர்வேனேல் 
எரிவேன்  எரிவாய்  நரகத்தே  இருப்பேன்  இளைப்பேன்  விளைப்பேனே. 
5
விளைப்பேன்  பவமே  அடிச்சிறியேன்  வினையால்  விளையும்  வினைப்போகம் 
திளைப்பேன்  எனினும்  கதிர்வடிவேல்  தேவே  என்னும்  திருமொழியால் 
இளைப்பேன்  அலன்இங்  கியம்புகிற்பேன்  எனக்கென்  குறையுண்  டெமதூதன் 
வளைப்பேன்  எனவந்  திடில்அவனை  மடிப்பேன்  கருணை  வலத்தாலே. 
6
வலத்தால்  வடிவேல்  கரத்தேந்தும்  மணியே  நின்னை  வழுத்துகின்ற 
நலத்தால்உயர்ந்த  பெருந்தவர்பால்  நண்ணும்  பரிசு  நல்கினையேல் 
தலத்தால்  உயர்ந்த  வானவரும்  தமியேற்  கிணையோ  சடமான 
மலத்தால்  வருந்தாப்  பெருவாழ்வால்  மகிழ்வேன்  இன்பம்  வளர்வேனே. 
7
இன்பப்  பெருக்கே  அருட்கடலே  இறையே  அழியா  இரும்பொருளே 
அன்பர்க்  கருளும்  பெருங்கருணை  அரசே  உணர்வால்  ஆம்பயனே 
வன்பர்க்  கரிதாம்  பரஞ்சோதி  வடிவேல்  மணியே  அணியேஎன் 
துன்பத்  திடரைப்  பொடியாக்கிச்  சுகந்தந்  தருளத்  துணியாயே. 
8
சுகமே  அடியர்  உளத்தோங்கும்  சுடரே  அழியாத்  துணையேஎன் 
அகமே  புகுந்த  அருள்தேவே  அருமா  மணியே  ஆரமுதே 
இகமே  பரத்தும்  உனக்கன்றி  எத்தே  வருக்கும்  எமக்கருள 
முகமே  திலைஎம்  பெருமானே  நினக்குண்  டாறு  முகமலரே. 
9
ஆறு  முகமும்  திணிதோள்ஈ  ராறும்  கருணை  அடித்துணையும் 
வீறு  மயிலும்  தனிக்கடவுள்  வேலும்  துணைஉண்  டெமக்கிங்கே 
சீறும்  பிணியும்  கொடுங்கோளும்  தீய  வினையும்  செறியாவே 
நாறும்  பகட்டான்  அதிகாரம்  நடவா  துலகம்  பரவுறுமே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com