
பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்
பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.
ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற
தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.
வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.
ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.
மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்
நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்
அலைதீங்கின குழல்தூங்கின அகம்ஏங்கின அரைமேல்
கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே.
மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்
நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே
மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்
ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே.
செங்கண்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார்
எங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார்
அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்
இங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே.
தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்
பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாமயில் மீதில்
கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே.
மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
பூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.
வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.



