திருவருட்பா  43. பவனிச் செருக்கு

பூவுண்டவெள்  விடைஏறிய  புனிதன்தரு  மகனார் 
பாவுண்டதொர்  அமுதன்னவர்  பசுமாமயில்  மேல்வந் 
தாவுண்டனர்  எனதின்னலம்  அறியார்என  இருந்தால் 
நாவுண்டவர்  திருமுன்பிது  நலம்  அன்றுமக்  கெனவே. 
1
ஒன்றார்புரம்  எரிசெய்தவர்  ஒற்றித்திரு  நகரார் 
மன்றார்நடம்  உடையார்தரு  மகனார்பசு  மயில்மேல் 
நின்றார்அது  கண்டேன்கலை  நில்லாது  கழன்ற 
தென்றாரொடு  சொல்வேன்எனை  யானேமறந்  தேனே. 
2
வாரார்முலை  உமையாள்திரு  மணவாளர்தம்  மகனார் 
ஆராஅமு  தனையார்உயிர்  அனையார்அயில்  அவனார் 
நேரார்பணி  மயிலின்மிசை  நின்றார்அது  கண்டேன் 
நீரார்விழி  இமைநீங்கின  நிறைநீங்கிய  தன்றே. 
3
ஒன்றோடிரண்  டெனுங்கண்ணினர்  உதவுந்திரு  மகனார் 
என்றோடிகல்  எழிலார்மயில்  ஏறிஅங்  குற்றார் 
நன்றோடினன்  மகிழ்கூர்ந்தவர்  நகைமாமுகங்  கண்டேன் 
கன்றோடின  பசுவாடின  கலைஊடின  அன்றே. 
4
மலைவாங்குவில்  அரனார்திரு  மகனார்பசு  மயிலின் 
நிலைதாங்குற  நின்றார்அவர்  நிற்கும்நிலை  கண்டேன் 
அலைதீங்கின  குழல்தூங்கின  அகம்ஏங்கின  அரைமேல் 
கலைநீங்கின  முலைவீங்கின  களிஓங்கின  அன்றே. 
5
மான்கண்டகை  உடையார்தரு  மகனார்தமை  மயில்மேல் 
நான்கண்டனன்  அவர்கண்டனர்  நகைகொண்டனம்  உடனே 
மீன்கண்டன  விழியார்அது  பழியாக  விளைத்தார் 
ஏன்கண்டனை  என்றாள்அனை  என்என்றுரைக்  கேனே. 
6
செங்கண்விடை  தனில்ஏறிய  சிவனார்திரு  மகனார் 
எங்கண்மணி  அனையார்மயி  லின்மீதுவந்  திட்டார் 
அங்கண்மிக  மகிழ்வோடுசென்  றவர்நின்றது  கண்டேன் 
இங்கண்வளை  இழந்தேன்மயல்  உழந்தேன்கலை  எனவே. 
7
தண்தேன்பொழி  இதழிப்பொலி  சடையார்தரு  மகனார் 
பண்தேன்புரி  தொடையார்தமைப்  பசுமாமயில்  மீதில் 
கண்டேன்வளை  காணேன்கலை  காணேன்மிகு  காமம் 
கொண்டேன்துயில்  விண்டேன்ஒன்றும்  கூறேன்வரு  மாறே. 
8
மாவீழ்ந்திடு  விடையார்திரு  மகனார்பசு  மயில்மேல் 
நீவீழ்ந்திட  நின்றார்அது  கண்டேன்என்றன்  நெஞ்சே 
பூவீழ்ந்தது  வண்டேமதி  போய்வீழ்ந்தது  வண்டே 
நாவீழ்ந்தது  மலரேகழை  நாண்வீழ்ந்தது  மலரே. 
9
வெற்றார்புரம்  எரித்தார்தரும்  மேலார்மயில்  மேலே 
உற்றார்அவர்  எழில்மாமுகத்  துள்ளேநகை  கண்டேன் 
பொற்றார்புயங்  கண்டேன்துயர்  விண்டேன்எனைப்  போல 
மற்றார்பெறு  வாரோஇனி  வாழ்வேன்மனம்  மகிழ்ந்தே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com