திருவருட்பா  22. ஆற்றா விரக்கம்

தணிகை  மலையைச்  சாரேனோ  சாமி  அழகைப்  பாரேனோ 
பிணிகை  யறையைப்  பேரேனோ  பேரா  அன்பு  கூரேனோ 
அணிசெய்  அருள்நீர்  ஆரேனோ  ஆறாத்  தாகம்  தீரேனோ 
பணிசெய்  தொழும்பில்  சேரேனோ  பார்மீ  திரங்கும்  நீரேனே. 
1
எளியேன்  என்ன  இருப்பாரோ  ஏழைக்  கிரங்கும்  விருப்பாரோ 
அளியேன்  பேர்நெஞ்  சிருப்பாரோ  அழியாக்  காமம்  திருப்பாரோ 
களியேன்  என்ன  உருப்பாரோ  கருதும்  அருட்குக்  கருப்பாரோ 
தெளியேன்  யான்என்  செய்கேனே  தென்பால்  தணிகைப்  பொருப்பாரே. 
2
செய்கொள்  தணிகை  நாடேனோ  செவ்வேள்  புகழைப்  பாடேனோ 
கைகள்  கூப்பி  ஆடேனோ  கருணைக்  கடலில்  நீடேனோ 
மெய்கொள்  புளகம்  மூடேனோ  மெய்அன்  பர்கள்பால்  கூடேனோ 
பொய்கொள்  உலகோ  டூடேனோ  புவிமீ  திருகால்  மாடேனே. 
3
வந்தென்  எதிரில்  நில்லாரோ  மகிழ  ஒருசொல்  சொல்லாரோ 
முந்தம்  மதனை  வெல்லாரோ  மோகம்  தீரப்  புல்லாரோ 
கந்தன்  எனும்பேர்  அல்லாரோ  கருணை  நெஞ்சம்  கல்லாரோ 
சந்தத்  தணிகை  இல்லாரோ  சகத்தில்  எல்லாம்  வல்லாரே. 
4
நாட்டும்  தணிகை  நண்ணேனோ  நாதன்  புகழை  எண்ணேனோ 
கூட்டும்  தொழும்பு  பண்ணேனோ  குறையா  அருள்நீர்  உண்ணேனோ 
சூட்டும்  மயக்கை  மண்ணேனோ  தொழும்பர்  இடத்தை  அண்ணேனோ 
காட்டும்  அவர்தாள்  கண்ணேனோ  கழியா  வாழ்க்கைப்  புண்ணேனே. 
5
காமப்  பயலைத்  தடுப்பாரோ  கடப்ப  மலர்த்தார்  கொடுப்பாரோ 
ஏமத்  தனத்தைக்  கடுப்பாரோ  என்மேல்  அன்பை  விடுப்பாரோ 
மாமற்  றொருவீ  டடுப்பாரோ  மனத்தில்  கோபம்  தொடுப்பாரோ 
தாமத்  தாழ்வைக்  கெடுப்பாரோ  தணிகை  தனில்வேல்  எடுப்பாரே. 
6
காவி  மலைக்கண்  வதியேனோ  கண்ணுள்  மணியைத்  துதியேனோ 
பாவி  மயலை  மிதியேனோ  பரமானந்தத்  துதியயேனோ 
ஓவில்  அருளைப்  பதியேனோ  உயர்ந்த  தொழும்பில்  கதியேனோ 
தாவில்  சுகத்தை  மதியேனோ  சற்றும்  பயனில்  ஓதியேனே. 
7
வருந்தும்  தனிமுன்  மன்னாரோ  வருத்தம்  உனக்கேன்  என்னாரோ 
இருந்தென்  இடத்தே  துன்னாரோ  இணைத்தாள்  ஈய  உன்னாரோ 
பொருந்திங்  கயலார்  அன்னாரோ  பொருள்ஈ  தென்று  பன்னாரோ 
செருந்தி  மலரும்  திருத்தணிகைத்  தேவர்  எவர்க்கும்  முன்னாரே. 
8
தணிகா  சலம்போய்த்  தழையேனோ  சாமி  திருத்தாள்  விழையேனோ 
பணிகா  தலித்துப்  பிழையேனோ  பாடி  மனது  குழையேனோ 
திணிகாண்  உலகை  அழையேனோ  சேர்ந்தவ்  வீட்டுள்  நுழையேனோ 
பிணிகாண்  உலகில்  பிறந்துழன்றே  பேதுற்  றலையும்  பழையேனே. 
9
மன்னும்  குவளை  ஈயாரோ  மதவேள்  மதத்தைக்  காயாரோ 
இன்னும்  கோபம்  ஓயாரோ  என்தாய்  தனக்குத்  தாயாரோ 
துன்னும்  இரக்கம்  தோயாரோ  துகளேன்  துயரை  ஆயாரோ 
பன்னும்  வளங்கள்  செறிந்தோங்கும்  பணைகொள்  தணிகைத்  தூயாரே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com