திருவருட்பா  12. கருணை மாலை

சங்க  பாணியைச்  சதுமு  கத்தனைச் 
செங்கண்  ஆயிரத்  தேவர்  நாதனை 
மங்க  லம்பெற  வைத்த  வள்ளலே 
தங்க  ருள்திருத்  தணிகை  ஐயனே. 
1
ஐய  னேநினை  அன்றி  எங்கணும் 
பொய்ய  னேற்கொரு  புகல்இ  லாமையால் 
வெய்ய  னேன்என  வெறுத்து  விட்டிடேல் 
மெய்ய  னேதிருத்  தணிகை  வேலனே. 
2
வேலன்  மாதவன்  வேதன்  ஏத்திடும் 
மேலன்  மாமயில்  மேலன்  அன்பர்உள் 
சால  நின்றவன்  தணிகை  நாயகன் 
வால  நற்பதம்  வைப்பென்  நெஞ்சமே. 
3
நெஞ்ச  மேஇஃ  தென்னை  நின்மதி 
வஞ்ச  வாழ்வினில்  மயங்கு  கின்றனை 
தஞ்சம்  என்றருள்  தணிகை  சார்த்தியேல் 
கஞ்ச  மாமலர்க்  கழல்கி  டைக்குமே. 
4
கிடைக்குள்  மாழ்கியே  கிலம்செய்  அந்தகன் 
படைக்குள்  பட்டிடும்  பான்மை  எய்திடேன் 
தடைக்குள்  பட்டிடாத்  தணிகை  யான்பதத் 
தடைக்க  லம்புகுந்  தருள்செ  ழிப்பனே. 
5
செழிக்கும்  சீர்திருத்  தணிகைத்  தேவநின் 
கொழிக்கும்  நல்லருள்  கொள்ளை  கொள்ளவே 
தழிக்கொண்  டன்பரைச்  சார்ந்தி  லேன்இவண் 
பழிக்குள்  ஆகும்என்  பான்மை  என்னையோ. 
6
என்னை  என்னைஈ  தென்றன்  மாதவம் 
முன்னை  நன்னெறி  முயன்றி  லேனைநின் 
பொன்னை  அன்னதாள்  போற்ற  வைத்தனை 
அன்னை  என்னும்நல்  தணிகை  அண்ணலே. 
7
அண்ணி  லேன்நினை  ஐய  நின்அடி 
எண்ணி  லேன்இதற்  கியாது  செய்குவேன் 
புண்ணி  னேன்பிழை  பொறுத்துக்  கோடியால் 
தண்ணின்  நீள்பொழில்  தணிகை  அப்பனே. 
8
அப்பன்  என்னுடை  அன்னை  தேசிகன் 
செப்பன்  என்குலத்  தெய்வம்  ஆனவன் 
துப்பன்  என்உயிர்த்  துணைவன்  யாதும்ஓர் 
தப்பில்  அன்பர்சேர்  தணிகை  வள்ளலே. 
9
வள்ளல்  உன்அடி  வணங்கிப்  போற்றஎன் 
உள்ளம்  என்வசத்  துற்ற  தில்லையால் 
எள்ளல்  ஐயவோ  ஏழைஎன்  செய்கேன் 
தள்ள  ரும்பொழில்  தணிகை  வெற்பனே. 
10
வெற்ப  னேதிருத்  தணிகை  வேலனே 
பொற்ப  னேதிருப்  போரி  நாதனே 
கற்ப  மேல்பல  காலம்  செல்லுமால் 
அற்ப  னேன்துயர்க்  களவு  சாற்றவே. 
11
சாறு  சேர்திருத்  தணிகை  எந்தைநின் 
ஆறு  மாமுகத்  தழகை  மொண்டுகொண் 
டூறில்  கண்களால்  உண்ண  எண்ணினேன் 
ஈறில்  என்னுடை  எண்ணம்  முற்றுமோ. 
12
முற்று  மோமனம்  முன்னி  நின்பதம் 
பற்று  மோவினைப்  பகுதி  என்பவை 
வற்று  மோசுக  வாழ்வு  வாய்க்குமோ 
சற்றும்  ஓர்கிலேன்  தணிகை  அத்தனே. 
13
அத்த  னேதணி  காச  லத்தருள் 
வித்த  னேமயில்  மேற்கொள்  வேலனே 
பித்த  னேன்பெரும்  பிழைபொ  றுத்திடில் 
சுத்த  அன்பர்கள்  சொல்வர்  ஏதமே. 
14
ஏதி  லார்என  எண்ணிக்  கைவிடில் 
நீதி  யோஎனை  நிலைக்க  வைத்தவா 
சாதி  வான்பொழில்  தணிகை  நாதனே 
ஈதி  நின்அருள்  என்னும்  பிச்சையே. 
15
பிச்சை  ஏற்றவன்  பிள்ளை  நீஎனில் 
இச்சை  ஏற்றவர்க்  கியாது  செய்குவாய் 
பச்சை  மாமயில்  பரம  நாதனே 
கச்சி  நேர்தணி  கைக்க  டம்பனே. 
16
கடப்ப  மாமலர்க்  கண்ணி  மார்பனே 
தடப்பெ  ரும்பொழில்  தணிகைத்  தேவனே 
இடப்ப  டாச்சிறி  யேனை  அன்பர்கள் 
தொடப்ப  டாதெனில்  சொல்வ  தென்கொலோ. 
17
பிச்சை  ஏற்றவன்  பிள்ளை  நீஎனில் 
இச்சை  ஏற்றவர்க்  கியாது  செய்குவாய் 
பச்சை  மாமயில்  பரம  நாதனே 
கச்சி  நேர்தணி  கைக்க  டம்பனே. 
18
கடப்ப  மாமலர்க்  கண்ணி  மார்பனே 
தடப்பெ  ரும்பொழில்  தணிகைத்  தேவனே 
இடப்ப  டாச்சிறி  யேனை  அன்பர்கள் 
தொடப்ப  டாதெனில்  சொல்வ  தென்கொலோ. 
19
என்சொல்  கேன்இதை  எண்ணில்  அற்புதம் 
வன்சொ  லேன்பிழை  மதித்தி  டாதுவந் 
தின்சொ  லால்இவண்  இருத்தி  என்றனன் 
தன்சொல்  செப்பரும்  தணிகைத்  தேவனே. 
20
தேவ  நேசனே  சிறக்கும்  ஈசனே 
பாவ  நாசனே  பரம  தேசனே 
சாவ  காசனே  தணிகை  வாசனே 
கோவ  பாசனே  குறிக்கொள்  என்னையே. 
21
குறிக்கொள்  அன்பரைக்  கூடு  றாதஇவ் 
வெறிக்கொள்  நாயினை  வேண்டி  ஐயநீ 
முறிக்கொள்  வாய்கொலோ  முனிகொள்  வாய்கொலோ 
நெறிக்கொள்  வோர்புகழ்  தணிகை  நித்தனே. 
22
தணிகை  மேவிய  சாமி  யேநினை 
எணிகை  விட்டிடேல்  என்று  தோத்திரம் 
அணிகை  நின்அடிக்  கயர்ந்து  நின்றுவீண் 
கணிகை  போல்எனைக்  கலக்கிற்  றுள்ளமே. 
23
உள்ளம்  நெக்குவிட்  டுருகும்  அன்பர்தம் 
நள்அ  கத்தினில்  நடிக்கும்  சோதியே 
தள்அ  ருந்திறல்  தணிகை  ஆனந்த 
வெள்ள  மேமனம்  விள்ளச்  செய்வையே. 
24
செய்வ  தன்றவன்  சிறிய  னேன்றனை 
வைவர்  அன்பர்கள்  என்னில்  மத்தனேன் 
உய்வ  தெவ்வணம்  உரைசெய்  அத்தனே 
சைவ  நாதனே  தணிகை  மன்னனே. 
25
மன்னும்  நின்அருள்  வாய்ப்ப  தின்றியே 
இன்னும்  இத்துயர்  ஏய்க்கில்  என்செய்கேன் 
பொன்னின்  அம்புயன்  போற்றும்  பாதனே 
தன்னில்  நின்றிடும்  தணிகை  மேலனே. 
26
மேலை  வானவர்  வேண்டும்  நின்திருக் 
காலை  என்சிரம்  களிக்க  வைப்பையோ 
சாலை  ஓங்கிய  தணிகை  வெற்பனே 
வேலை  ஏந்துகை  விமல  நாதனே. 
27
வேத  மாமுடி  விளங்கும்  நின்திருப் 
பாதம்  ஏத்திடாப்  பாவி  யேன்தனக் 
கீதல்  இன்றுபோ  என்னில்  என்செய்கேன் 
சாதல்  போக்கும்நல்  தணிகை  நேயனே. 
28
நேயம்  நின்புடை  நின்றி  டாதஎன் 
மாய  நெஞ்சினுள்  வந்தி  ருப்பையோ 
பேய  னேன்பெரும்  பிழைபொ  றுத்திடத் 
தாய  நின்கடன்  தணிகை  வாணனே. 
29
வாணு  தல்பெரு  மாட்டி  மாரொடு 
காணு  தற்குனைக்  காதல்  கொண்டனன் 
ஏணு  தற்கென  தெண்ணம்  முற்றுமோ 
மாணு  தற்புகழ்த்  தணிகை  வண்ணனே. 
30
வண்ண  னேஅருள்  வழங்கும்  பன்னிரு 
கண்ண  னேஅயில்  கரங்கொள்  ஐயனே 
தண்ண  னேர்திருத்  தணிகை  வேலனே 
திண்ணம்  ஈதருள்  செய்யும்  காலமே. 
31
கால்கு  றித்தஎன்  கருத்து  முற்றியே 
சால்வ  ளத்திருத்  தணிகை  சார்வன்என் 
மால்ப  கைப்பிணி  மாறி  ஓடவே 
மேல்கு  றிப்பனால்  வெற்றிச்  சங்கமே. 
32

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com