
பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
அருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள
திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.



