
ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்
ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்
நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே
நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்
பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே
பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி
ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
ஊழை யேமிக நொந்திடு வேனோ
உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்
யாவும் நீஎன எண்ணிய நாயேன்
மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்
மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்
சான்று கொண்டது கண்டனை யேனும்
தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை
ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
தீய ராதியில் தீயன்என் றெனைநின்
திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
மோக வாரியின் மூழ்கின னேனும்
அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
அப்ப நின்அருள் அம்பியை நம்பி
தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
கல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான்
கடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல்
இல்லை நல்லைநின் அருள்எனக் கதனால்
இல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான்
அல்லை இல்லையால் அருள்தரா திருத்தல்
அடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே
எல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன்
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்
அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.



