திருவருட்பா  6. திருவருள் வழக்க விளக்கம்

தோடுடை  யார்புலித்  தோலுடை  யார்கடல்  தூங்கும்ஒரு 
மாடுடை  யார்மழு  மான்உடை  யார்பிர  மன்தலையாம் 
ஓடுடை  யார்ஒற்றி  யூர்உடை  யார்புகழ்  ஓங்கியவெண் 
காடுடை  யார்நெற்றிக்  கண்உடை  யார்எம்  கடவுளரே. 
1
வண்ணப்பல்  மாமலர்  மாற்றும்  படிக்கு  மகிழ்ந்தெமது 
திண்ணப்பர்  சாத்தும்  செருப்படி  மேற்கொண்டு  தீஞ்சுவைத்தாய் 
உண்ணப்  பரிந்துநல்  ஊன்தர  உண்டுகண்  ஒத்தக்கண்டே 
கண்ணப்ப  நிற்க  எனக்கைதொட்  டார்எம்  கடவுளரே. 
2
செல்இடிக்  கும்குரல்  கார்மத  வேழச்  சினஉரியார் 
வல்அடுக்  கும்கொங்கை  மாதொரு  பாகர்  வடப்பொன்வெற்பாம் 
வில்எடுக்  கும்கையர்  சாக்கியர்  அன்று  விரைந்தெறிந்த 
கல்லடிக்  கும்கதி  காட்டினர்  காண்எம்  கடவுளரே. 
3
ஏழியல்  பண்பெற்  றமுதோ  டளாவி  இலங்குதமிழ்க் 
கேழியல்  சம்பந்தர்  அந்தணர்  வேண்டக்  கிளர்ந்தநற்சீர் 
வீழியில்  தம்பதிக்  கேவிடை  கேட்கவெற்  பாள்உடனே 
காழியில்  தன்னுருக்  காட்டின  ரால்எம்  கடவுளரே. 
4
நாட்டில்  புகழ்பெற்ற  நாவுக்  கரசர்முன்  நாள்பதிகப் 
பாட்டிற்  கிரக்கம்இல்  லீர்எம்  பிரான்எனப்  பாடஅன்றே 
ஆட்டிற்  கிசைந்த  மலர்வாழ்த்தி  வேதம்  அமைத்தமறைக் 
காட்டில்  கதவம்  திறந்தன  ரால்எம்  கடவுளரே. 
5
பைச்சூர்  அரவப்  படநடத்  தான்அயன்  பற்பலநாள் 
எய்ச்சூர்  தவஞ்செய்  யினும்கிடை  யாப்பதம்  ஏய்ந்துமண்மேல் 
வைச்சூரன்  வன்தொண்டன்  சுந்தரன்  என்னுநம்  வள்ளலுக்குக் 
கச்சூரில்  சோறிரந்  தூட்டின  ரால்எம்  கடவுளரே. 
6
ஏணப்  பரிசெஞ்  சடைமுத  லானஎல்  லாம்மறைத்துச் 
சேணப்  பரிகள்  நடத்திடு  கின்றநல்  சேவகன்போல் 
மாணப்  பரிபவம்  நீக்கிய  மாணிக்க  வாசகர்க்காய்க் 
காணப்  பரிமிசை  வந்தன  ரால்எம்  கடவுளரே. 
7
எல்லாம்  செயவல்ல  சித்தரின்  மேவி  எழில்மதுரை 
வல்லாரின்  வல்லவர்  என்றறி  யாமுடி  மன்னன்முன்னே 
பல்லா  யிரஅண்ட  மும்பயம்  எய்தப்  பராக்கிரமித்துக் 
கல்லானை  தின்னக்  கரும்பளித்  தார்எம்  கடவுளரே. 
8
மால்எடுத்  தோங்கிய  மால்அயன்  ஆதிய  வானவரும் 
ஆல்அடுத்  தோங்கிய  அந்தண  னேஎன்  றடைந்திரண்டு 
பால்எடுத்  தேத்தநம்  பார்ப்பதி  காணப்  பகர்செய்மன்றில் 
கால்எடுத்  தாடும்  கருத்தர்கண்  டீர்எம்  கடவுளரே. 
9
மாற்பதம்  சென்றபின்  இந்திரர்  நான்முகர்  வாமனர்மான் 
மேற்பதம்  கொண்ட  உருத்திரர்  விண்ணவர்  மேல்மற்றுள்ளோர் 
ஆற்பதம்  கொண்டபல்  ஆயிரம்  கோடிஅண்  டங்கள்எல்லாம் 
காற்பதம்  ஒன்றில்  ஒடுக்கிநிற்  பார்எம்  கடவுளரே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com