திருப்புகழ் · 475கூந்தலாழ விரிந்து (சிதம்பரம்)
kUndhalAzhavirindhu
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன
தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான
கூந்த லாழவி ரிந்து சரிந்திட
காந்து மாலைகு லைந்து பளிங்கிட
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங்
கூண்க ளாமென பொங்கந லம்பெறு
காந்தள் மேனிம ருங்குது வண்டிட
கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச்
சாந்து வேர்வின ழிந்து மணந்தப
வோங்க வாகில்க லந்து முகங்கொடு
தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச்
சேண்சு லாமகு டம்பொடி தம்பட
வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.
பத உரை · word meanings
- கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து
பளிங்கிட கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட
கூந்தல் தாழ்ந்து விரிவுற்றுச் சரிந்து விழ, ஒளி வீசும் மாலை குலைவுற்று பளிங்கு போல் விளங்க, கூரியவாள் போன்றும் கெண்டை மீன் போன்றும் உள்ள கண்கள் கலக்கம் கொள்ள, - கொங்கை தானும் கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு
காந்தள் மேனி மருங்கு துவண்டிட கூர்ந்த ஆடை குலைந்து
புரண்டு இரசங்கள் பாய
மார்பகங்களும் குன்று போல எழுச்சி கொள்ள, செழிப்புள்ள காந்தள் பூ போன்ற உடலில் இடை துவண்டு போக, அவ்விடையைச் சுற்றி வளைத்துள்ள ஆடை குலைவு உற்றுப் புரண்டு இன்ப ஊறல்கள் பாய்ந்து பெருக, - சாந்து வேர்வின்அழிந்து மணம் த(ப்)ப ஓங்கு அவாவில்
கலந்து முகம் கொடு தான் பலா சுளையின் சுவை கண்டு
இதழுண்டு
(நெற்றியில் உள்ள) சாந்து வேர்வையினால் அழிந்து வாசனை கெட, மிக்கு எழும் காதலுடன் சேர்ந்து முகத்தோடு முகம் கொடுத்து, பலாச் சுளையின் சுவை கண்டது போல் வாயிதழை உண்டு, - மோகம் தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட வாஞ்சை
மாதருடன் புளகம் கொடு சார்ந்து நாய் என அழிந்து விழுந்து
உடல் மங்குவேனோ
காம ஆசையால் புறா, மயில் ஆகிய புட்குரலுடன் கொஞ்ச, ஆசை வைத்த விலைமாதர்களுடன் புளகாங்கிதத்துடன் இணங்கி நாய் போல அழிந்து விழுந்து உடல் வாட்டம் அடைவேனோ? - தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி
சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு
சூரைச் சேண் சுலா மகுடம் பொடிதம் பட
தீந்த தோதக தந்தன திந்திமி என்ற ஓசையை எழுப்புகின்ற பேரிகை, துந்துபி, சங்கு இவைகளுடன் சேர்ந்த ஊதுகுழல், பம்பை என்னும் பறை, பேருடுக்கைகள் இவைகளுடைய ஒலி மிக்கு எழ வந்த சூரனுடைய உயர்ந்து விளங்கும் கிரீடம் பொடிபட, - ஓங்கு அவ்வேழ் கடலும் சுவற அம் கையில் சேந்த வேலது
கொண்டு நடம் பயில் கந்த வேளே
விளங்கும் அந்த ஏழு கடல்களும் வற்றிட, அழகிய கையில் சிவந்த வேலாயுதத்தை ஏந்தி, (துடிக்) கூத்து ஆடுகின்ற கந்தப் பெருமானே, - மாந் தண் ஆரு(ம்) வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை
கரும்புகள் விஞ்சிடு வான் குலாவு சிதம்பரம் வந்து அமர்
செங்கை வேலா
குளிர்ச்சி நிறைந்த மாமரச் சோலையில் குயில் கொஞ்ச, தென்னை, வாழை, கரும்பு ஆகியவை மேலிட்டு எழுந்து ஆகாயத்தை அளாவும் தில்லையில் வந்து வீற்றிருக்கும் செங்கை வேலனே, - மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை
மருங்கு பொன் வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய
தம்பிரானே.
பெருமையும் ஒளியும் கொண்ட மார்பக மலைகளை உடைய, அழகு வாய்ந்த நாயகி (தேவயானையும்), மின்னல் போன்ற இடையையும் பொன் உருக்கி வார்த்தது போலுள்ள உருவத்தையும் கொண்ட குறப்பெண்ணாகிய வள்ளியும் வணங்கிய பெருமாளே.



