திருப்புகழ் · 474கரிய மேகமெனும் (சிதம்பரம்)
kariyamEgamenum
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன
தனன தான தனந்தன தானன ...... தந்ததான
கரிய மேக மெனுங்குழ லார்பிறை
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி
கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர்
கமுக க்ரீவர் புயங்கழை யார்தன
மலைக ளாஇ ணையுங்குவ டார்கர
கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை
வரிய பாளி தமுந்துடை யாரிடை
துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல்
மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர்
மயில்கள் போல நடம்புரி வாரியல்
குணமி லாத வியன்செய லார்வலை
மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய்
சரியி லாத சயம்பவி யார்முகி
லளக பார பொனின்சடை யாள்சிவை
சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே
சதப ணாம குடம்பொடி யாய்விட
அவுணர் சேனை மடிந்திட வேயொரு
தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா
அரிய மேனி யிலங்கையி ராவணன்
முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும்
அழகு சோபி தஅங்கொளு மானன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி
அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே.
பத உரை · word meanings
- கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு
எ(ன்)னும் புருவார் விழி கயல்கள் வாளி எ(ன்)னும்
செயலார் மதி துண்ட மாதர்
கரு நிறம் வாய்ந்த மேகம் என்று சொல்லும்படியான கூந்தலை உடையவர். பிறை போலவும் வில் போலவும் விளங்கி அழகு கொண்ட புருவங்களை உடையவர். கயல் மீனை ஒத்த கண்கள் அம்பு போன்று செயலை ஆற்றும் தொழிலினர். சந்திரன் போன்ற முகம் உடைய விலைமாதர்கள். - கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும்
குவடார் கர கமல வாழை ம(ன்)னும் தொடையார் சர சுங்க
மாடை வரிய பாளிதம் உந்து உடையார்
கமுகு போன்ற கழுத்தை உடையவர். மூங்கில் போன்ற தோள்களை உடையவர். மார்பகங்கள் மலைக்கு இணையான திரட்சி உடையவர். தாமரை போன்ற கைகள், வாழை போன்ற தொடைகளை உடையவர். கள்ளத்தனமான நடையால் கைக்கொண்ட பொன்னால் வாங்கப்பட்ட பட்டுப் புடவைகளால் முன்னிட்டு விளங்கும் உடைகளைத் தரித்தவர். - இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் மணம்
உலாவிய ரம்பையினார் பொருள் சங்க மாதர் மயில்கள்
போல நடம் புரிவார்
இடுப்பு உடுக்கை போலவும் நூல் போலவும் உள்ள அழகியர். அழகு நிறைந்த பெண்குறி நறு மணம் வீசும் அரம்பை போன்றவர். பொருளுக்காகக் கூடுதலை உடைய பொது மாதர் மயிலைப் போன்று நடனம் செய்பவர். - இயல் குணம் இ(ல்)லாத வியன் செயலார் வலை மசகி
நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய்
நல்ல தன்மையான குணம் இல்லாத வியப்பான செயல்களைக் கொண்டவர் ஆகிய விலைமாதர்களின் வலையில் மனம் கலக்குண்டு அடியேன் அழிவுறலாமோ? உன்னுடைய அன்பைத் தந்தருள்வாய். - சரி இ(ல்)லாத சயம்பவியார் முகில் அளக பார பொ(ன்)னின்
சடையாள் சிவை சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த
வேளே
தனக்கு ஒப்பில்லாத சுயம்புவான தேவதை, மேகம் போன்ற கூந்தல் பாரத்தை உடையவள், பொன் நிறமான சடையை உடையவளாகிய சிவை, எல்லா உலகங்களுக்கும் மேம்பட்ட அழகு உடையவள் ஆகிய உமை பெற்று அருளிய கந்தவேளே. - சத பணா மகுடம் பொடியாய் விட அவுணர் சேனை
மடிந்திடவே ஒரு தழல் கொள் வேலை எறிந்திடு சேவக
செம்பொன் வாகா
நூற்றுக் கணக்கான பருத்த மணி முடிகள் பொடியாக, அசுரர்களின் சேனை இறக்க, ஒப்பற்ற நெருப்பைக் கொண்டதுமான வேலைச் செலுத்திய வல்லவனே, செம் பொன் நிற அழகனே, - அரிய மேனி இலங்கை இராவணண் முடிகள் வீழ சரம் தொடு
மாயவன் அகிலம் ஈரெழும் உண்டவன் மா மருக
அருமையான உடலைக் கொண்ட இலங்கை அரசனாகிய ராவணன் தலைகள் அற்று விழும்படி அம்பைச் செலுத்திய மாயவனும், பதினான்கு உலகங்களையும் உண்டவனுமாகிய திருமாலின் சிறந்த மருகனே, - அண்டர் ஓதும் அழகு சோபித அம் கொ(ள்)ளும் ஆனன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வ(ள்)ளி அருள் கொடு
ஆடி சிதம்பர(ம்) மேவிய தம்பிரானே.
தேவர்கள் ஓதிப் புகழும் அழகு வாய்ந்த ஒளியை உடையவனே, எழில் வாய்ந்த முகத்தை உடைய தேவதையாகிய தேவயானை, உன் ஆசைக்கு உகந்தவளாகிய மலை நில ஊரில் (வள்ளிமலையில்) வாழ்கின்ற வள்ளி நாயகி ஆகிய இருவருக்கும் அருள் புரிந்து லீலைகள் செய்து, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே.



