திருப்புகழ் · 269சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை)

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான

Yaazh Music

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

பத உரை

  • சினத்தவர் முடிக்கும்
    முருகன் அடியார்களை கோபிப்பவர்களது தலைக்கும்,
  • பகைத்தவர் குடிக்கும்
    அவர்களைப் பகை செய்தவர்களது குடும்பத்திற்கும்,
  • செகுத்தவர் உயிர்க்கும்
    அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,
  • சினமாகச் சிரிப்பவர் தமக்கும்
    அவர்களைக் கண்டு கோபமாகச் சிரிப்பவர்கட்கும்,
  • பழிப்பவர் தமக்கும்
    அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,
  • திருப்புகழ் நெருப்பென்று
    திருப்புகழே நெருப்பாகி (அடியோடு அழிக்குமென)
  • அறிவோம்யாம்
    யாம் நன்கு அறிவோம்.
  • நினைத்தது மளிக்கும்
    (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும் அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,
  • மனத்தையு முருக்கும்
    (பாடுவோர், கேட்போரின்) மனதையும் உருக்குவதும்,
  • பிறவாமல்
    மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்
  • நிசிக்கரு வறுக்கும்
    இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை அறுப்பதும்,
  • நெருப்பையு மெரிக்கும்
    அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே எரிப்பதும்,
  • பொருப்பையு மிடிக்கும்
    மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய,
  • நிறைப்புகழ்
    எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை
  • உரைக்குஞ் செயல்தாராய்
    பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.
  • தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன
    (அதே ஒலியுடன்)
  • பேரி
    பேரிகைகள் முழங்கவும்,
  • தடுட்டுடு டுடுட்டுண் டென
    (அதே ஒலியுடன்)
  • துடி முழக்கும்
    உடுக்கைகள் முழங்கவும்,
  • தளத்துட னடக்கும்
    சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த
  • கொடுசூரர் சினத்தையும்
    கொடிய சூராதி அசுரர்களின் கோபத்தையும்,
  • உடற்சங் கரித்தம லைமுற்றும்
    அறுத்தெறிந்த பிணமலைகள் யாவையும்,
  • சிரித்தெரி கொளுத்தும்
    புன்னகை புரிந்தே அதிலெழுந்த அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய
  • கதிர்வேலா
    ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,
  • தினைக்கிரி குறப்பெண்
    தினைப்பயிர் விளையும் மலைக் குறவள்ளியை
  • தனத்தினில் சுகித்து
    மார்புற அணைத்து இன்புற்று,
  • எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே.
    உயர்ந்தோர் மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout