குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.
kuTimaTintu kuRRam perukum maTimaTintumANTa unjaRRi lavarkku
Meaning in English
His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not strive
பொருள் / உரை
மு.வரதராசன்
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
பரிமேலழகர்
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும். ('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.




