திருஅருட்பிரகாச வள்ளலார்

திருஅருட்பிரகாச வள்ளலார் அருளியஅனுஷ்டான விதிAnushtana Vidhi

வழிபாட்டு முறை ஒன்றை, கும்ப பூசை உள்ளிட்ட படிநிலைகளாக விளக்கும் உரைநடைப் பகுதி.

மூலம் Vallalar's own words

1. அனுஷ்டான விதி

திருச்சிற்றம்பலம்

சிவகணபதியே நம வென்று குட்டிக் கொள்ளுகிறது. சிவகுரவே நம வென்று நமஸ்கரிப்பது.

கும்ப பூசை

சிவாய நம என்று நிரீக்ஷணஞ்* செய்வது.

அஸ்திராய நம என்று புரோக்ஷணம் செய்வது.

கவசாய நம என்று திக்பந்தனம் செய்வது.

அஸ்திராய நம என்று தாடனம் செய்வது.

சிவாய நம என்று தாளத்திரயம் செய்வது.

கவசாய நம என்று அவகுண்டனம் செய்வது.

சிவாய நம என்று தேனுமுத்திரை செய்வது. அஸ்திராய நம என்று பத்து விசை ஜபம் செய்து, மூன்று விசை அஸ்திராய நம வென்று சிரசில் புரோக்ஷித்துக்கொண்டு, மேற்படியால் மூன்றுவிசை ஜபஞ்செய்து, மேற்படியால் மூன்று விசை தர்ப்பித்து, "ஆத்மதத்துவாய சுவதா, வித்யாதத்துவாய சுவதா, சிவதத்துவாய சுவதா" என்று அரை உளுந்து அமிழளவாக ஜலம் ஆசமித்து, அஸ்திராய நம வென்று கட்டைவிரல் மடக்கி அதரசுத்தி செய்து, கவசாய நம வென்று முகவாய்க்கட்டை இருபுறம், நாசி 2, கண் 2, காது 2, தோள் 2, தொப்புள், மார்பு - இப் பன்னிரண் டிடமுந் தொடுவது.

பின் திருநீறெடுத்து இடது கையில் வைத்து, அஸ்திராய நமவென்று ஜலம் புரோக்ஷித்து வலதுதொடை மேல்வைத்து, "நிவர்த்தி கலாய நம, பிரதிஷ்டாகலாய நம, வித்தியாகலாய நம, சாந்திகலாய நம, சாந்தியாதீத கலாய நம, ஈசான மூர்த்தாய நம, தத்புருஷவக்த்திராய நம, நேத்திரேப்யோ நம, அஸ்திராய நம" என்று ஜபித்து, கவசாய நம வென்று குழைத்து, அஸ்திராய நம வென்று நிருதி திக்கில் தெறித்து, ஈசான மூர்த்தாய நமவென்று சிரசிலும்,

தத்புருஷ வக்த்திராய நம வென்று நெற்றியிலும், அகோர ஹிருதயாய நம வென்று மார்பிலும், வாமதேவ குகியாய நம வென்று நாபியிலும், சத்தியோஜாத மூர்த்தியே நம வென்று முழங்கால் தோள் முழங்கை மணிக்கட்டு பக்கம் முதுகு கண்டம் - இந்த இடங்களில் தரித்துக் கொண்டு, கொஞ்சம் ஜலம்விட்டுக் கையலம்பி, முட்டி பிடித்து, சிவாய நம வென்று ஜலம் சூழ வளையவிட்டு, சிவாய நம வென்று மூன்று விசை அர்க்கியங் கொடுத்து, பஞ்சபிரம மந்திரத்துடன் ஹிருதய சிர சிகை கவச நேத்திர அஸ்திராதி மந்திரங்களால் தர்ப்பித்து, முன்போல் ஆசமனாதி தொடுமிடந் தொட்டு, அஸ்திராய நமவென்று மணையின் பேரில் புரோக்ஷித்து, பின்பு சிவகணபதியே நமவென்று குட்டிக்கொண்டு, சிவகுரவே நம வென்று நமஸ்கரித்து, தக்ஷிணாமூர்த்தியைத் தியானித்து, பஞ்சாக்ஷரத்தை நூற்றெட்டு ஜபஞ்செய்து, பின்பு சிவசூரியாய நமவென்று கையில் ஜலம் விட்டுச் சூரிய அர்க்கியங் கொடுத்து, பின்பு, பதினொரு விசை நமஸ்கரித்து, தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரிய புராணம் ஸ்தோத்திரஞ் செய்து, முன்போல் ஆசமனாதி தொடுமிடந் தொட்டு, விபூதி தரித்துக்கொண்டு, மணையின்பேரில் அஸ்திராய நம வென்று ஜலம் விட்டுத்தொட்டு, ஹிருதயாய நம வென்று மார்பிலும் நெற்றியிலு மிட்டு, பின்பு சிவதரிசனம் குரு தரிசனம் செய்து, பின்பு விதிப்படி போஜனஞ் செய்து, பின்பு சிவாகமாதிகள் பாராயணஞ் செய்தல்.

திருச்சிற்றம்பலம்

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout