திருப்புகழ் · 453வண்டையொத்து (சிதம்பரம்)
vaNdaiyoththu
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான
வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...... கென்பக்ரீவம்
மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ...... ளன்பினாலே
கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல்
கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன்
அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம்
அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர்
கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி ...... லங்குவேலால்
கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை ...... தம்பிரானே.
பத உரை · word meanings
- வண்டை ஒத்துக் கயல் கண் சுழற்றுப் புருவம் சிலைக்குத்
தொடு அம்பை ஒத்துத் தொடை வண்டு சுற்றுக் குழல்
கொண்டல் ஒத்து
வண்டைப் போல், கயல் மீன் அனைய கண் தன் சுழற்சியால் புருவமாகிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்பை நிகர்க்கவும், (அணிந்துள்ள) மாலையில் வண்டு சுற்றுகின்ற கூந்தல் மேகத்தை நிகர்க்கவும், - கமுகு என்ப க்ரீவம் மந்தரத்தைக் கட(ம்) பொங்கு இபத்துப்
பணை கொம்பை ஒத்துத் தனம் முந்து கு(கூ)ப்ப
கழுத்து கமுக மரம் என்று சொல்லும்படியும், மந்திரமலையையும் மதம் பொங்குகின்ற யானையின் பருத்த தந்தங்களையும் நிகர்த்து மார்பகங்கள் மின்னிட்டுக் கூம்ப, - தெரு வந்து எத்திப் பொரு மங்கையர்க் கைப் பொருள்
அன்பினாலே கொண்டு அழைத்துத் தழுவும் கை தட்டில்
பொருள் கொண்டு தெட்டிச் சரசம் புகழ்க்குக் குனகும்
குழற்கு
தெருவில் வந்து வஞ்சித்து சண்டை செய்யும் விலைமாதர்கள் தமது கையில் கிடைத்த பொருளின் பொருட்டுக் காட்டும் அன்பினால், (தமது வீட்டுக்குக்) கொண்டு போய், தழுவும் கைகளால் தட்டில் பொருளைப் பெற்றவுடன் வஞ்சனை எண்ணத்துடன் காம லீலைகளைச் செய்தும், புகழ்ந்தும் கொஞ்சியும் பேசுகின்ற, அடர்ந்த குழலை உடைய பொது மகளிரின் பொருட்டு - இப்படி நொந்து கெட்டுக் குடில் மங்கு உறாமல் கொண்டு
சத்திக் கடல் உண்டு உகப்பத் துன் நின் அன்பருக்குச்
செயல் தொண்டு பட்டுக் கமழ் குங்குமத்தில் சரணம் பிடித்துக்
கரை என்று சேர்வேன்
இவ்வாறு மனம் கெட்டு, உடம்பு வாட்டம் அடையாமல், (தமது) ஆற்றலைக் கொண்டு கடலைக் குடித்து உமிழ்ந்து உன்னை அடுத்த உன்னுடைய அன்பரான அகத்தியருக்கு பணி செய்து தொண்டு ஆற்றி, நறு மணம் வீசும் செஞ்சாந்துள்ள திருவடிகளைப் பற்றி (முக்திக்) கரையை என்று அடைவேன்? - அண்டம் மிட்டிக் குட டிண்டிமிட்டிக்கு குடந்த கொட்டத்
தகு டிங்கு தொக்கத் தமடம் சகட்டைக் குண கொம்பு
(இ)டக்கைக்கு இடல் என்ப தாளம்
அண்டங்களை நெருங்கி வளைய, டிண்டிமிட்டிக்கு இவ்வாறாக ஒலிகளை குடமுழ (கட) வாத்தியம் முழக்கம் செய்ய, தகுந்த டிங்கு என்னும் ஒலி ஒன்று கூட, தம்பட்டம் என்னும் பறை, சகண்டை (துந்துபி) என்னும் முரசு, சிறந்த ஊது கொம்பு, இடக்கை ஆகியவைகளுக்கு உதவியாக தாளம் ஒலிக்க, - அண்டம் எட்டுத் திசை உ(ம்)பல் சர்ப்பத் திரள்கொண்டல்
பட்டுக் கிரியும் பொடித்து புலன் அஞ்சு அவித்துத் திரள்
அண்டம் முட்டத் துகள்
அண்டங்களும், எட்டு திசைகளும், (எட்டு) யானைகளும், எட்டு பாம்புகளும், மேகமும் குலைபட்டு, மலைகளும் பொடியாய், ஐந்து பொறிகளையும் கெடுத்து, திரண்ட அண்டங்களில் முழுமையும் தூசி உண்டாக, - வந்த சூரர் கண்டம் அற்றுக் குடல் என்பு நெக்குத் தசனம்
கடித்துக் குடிலம் சிவப்பச் செ(ந்)நீர் கண் தெறிக்கத் தலை
பந்து அடித்துக் கையில் இலங்கு வேலால்
எதிர்த்து வந்த அசுரர்களின் கழுத்து அறுபட்டுப் போய், குடலும், எலும்பும் தளர்ச்சி உற்று, பற்களைக் கடித்து, தலை மயிர் (ரத்தத்தால்) சிவப்பாக, ரத்தம் கண்களினின்றும் வெளிப்பட்டுச் சிதற, (அசுரர்களின்) தலைகளைப் பந்து அடிப்பது போல் அடித்து, கையில் ஏந்திய வேலாயுதத்தால் - கண் களிக்கக் ககனம் துளுக்கப் புகழ் இந்திரற்குப் பதம்
வந்து அளித்துக் கனக அம்பலத்தில் குற மங்கை பக்கத்து
உறை தம்பிரானே.
கண் குளிர்ச்சி அடைய விண்ணுலகம் (இழந்த பொலிவை மீண்டும் வரப் பெற்று) செழிப்புற, (தன்னைப்) புகழ்ந்த இந்திரனுக்கு இந்திர பதவியை அருள் செய்து, பொன்னம்பலத்தில் குற மகள் வள்ளியம்மையின் பக்கத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே.



