திருப்புகழ் · 401இருவினை அஞ்ச (திருவருணை)
iruvinaianja
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
Yaazh Music
இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- இருவினை யஞ்ச
நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய, - மலவகை மங்க
மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய, - இருள்பிணி மங்க
அஞ்ஞானமும், நோய்களும் அகல, - மயிலேறி
நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து, - இனவருள் அன்பு மொழிய
அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, - க டம்புவின் அதகமும் கொடு
உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி - அளிபாட
வண்டுகள் ரீங்காரம் செய்து முரல, - கரிமுகன் எம்பி முருகனென
யானைமுகன் கணபதி 'என் தம்பியே, முருகா' என்றழைக்க, - அண்டர் களிமலர் சிந்த
தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய, - அடியேன்முன் கருணைபொழிந்து
என் முன்னே கருணை மிகக் காட்டி - முகமும் மலர்ந்து கடுகி
மலர்ந்த முகத்தோடு வேகமாக - நடங்கொடு அருள்வாயே
நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும். - திரிபுர மங்க மதனுடல் மங்க
திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும், - திகழ்நகை கொண்ட
விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த - விடையேறிச் சிவம்
ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான் - வெளி யங்கண்அருள் குடிகொண்டு
பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து, - திகழந டஞ்செய்து
விளங்க நடனம் செய்து, - எமையீண் அரசியிடங்கொள
எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு, - மழுவுடை யெந்தை அமலன்
மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் - மகிழ்ந்த குருநாதா
மகிழ்ச்சியடைந்த குருநாதனே, - அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின் - அமளிந லங்கொள் பெருமாளே.
மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே.




