தனன தனனா தனன தனனா
தனன தனனா ...... தனதான
இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ ...... அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா ...... னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா ...... கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா ...... கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா ...... கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் ...... விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் ...... பெருமாளே.
- இருவர் மயலோ
வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது நீ கொண்ட ஆசையோ? - அமளி விதமோ
அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக நடக்கும் ஆரவாரங்களோ? - எனென செயலோ
வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத் தெரியாது) - அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார்
உன்னை அணுகமுடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார் - இசையும் ஒலிதான் இவைகேளாது
இத்தனை பேரும் முறையிடும் ஒலிகள் என் செவியில் விழாதபோது, - ஒருவன் அடியேன் அலறு மொழிதான்
யான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி - ஒருவர் பரிவாய் மொழிவாரோ
யாரேனும் ஒருவர் அன்போடு வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ? - உனது பததூள் புவன கிரிதான்
உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம். - உனது கிருபாகரம் ஏதோ
அப்படியென்றால் உன் திருவருள் எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்). - பரம குருவாய் அணுவில் அசைவாய்
மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய், - பவன முதலாகிய பூதப் படையும் உடையாய்
காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே, - சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா
எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே, - அரியும் அயனோடு அபயம் எனவே
திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புக, - அயிலை யிருள்மேல் விடுவோனே
உன் வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே, - அடிமை கொடுநோய் பொடிகள் படவே
இவ்வடியேனுக்கு ஏற்பட்ட தொழுநோயைத் தூளாக்கிய* - அருண கிரிவாழ் பெருமாளே.
திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே.



