தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.
- இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி
இரவும், பகலும், பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி, - திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. - பரகருணைப் பெருவாழ்வே
மேலான கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே, - பரசிவதத்துவஞானா
உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப் பொருளே, - அரனருள்சற் புதல்வோனே
சிவபிரான் அருளிய நற்குணப் பிள்ளையே, - அருணகிரிப் பெருமாளே.
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.



