திருப்புகழ் · 399இரவுபகற் பலகாலும் (திருவருணை)
iravupagaRpalakAlum
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி
இரவும், பகலும், பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி, - திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. - பரகருணைப் பெருவாழ்வே
மேலான கருணையுடன் விளங்கும் பெருவாழ்வே, - பரசிவதத்துவஞானா
உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப் பொருளே, - அரனருள்சற் புதல்வோனே
சிவபிரான் அருளிய நற்குணப் பிள்ளையே, - அருணகிரிப் பெருமாளே.
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.



