திருப்புகழ் 398 இரத சுரதமுலை (திருவருணை)

தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான
இரத  சுரதமுலை  களுமார்பு  குத்த  நுதல்வேர்  வரும்ப 
அமுத  நிலையில்விர  லுகிரேகை  தைக்க  மணிபோல்  விளங்க 
இசலி  யிசலியுப  ரிதலீலை  யுற்று  இடைநூல்  நுடங்க  ......  வுளமகிழ்ச்  சியினோடே 
இருவ  ருடலுமொரு  வுருவாய்ந  யக்க  முகமே  லழுந்த 
அளக  மவிழவளை  களுமேக  லிக்க  நயனா  ரவிந்த 
லகரி  பெருகஅத  ரமுமேய  ருத்தி  முறையே  யருந்த  ......  உரையெழப்  பரிவாலே 
புருவ  நிமிரஇரு  கணவாள்நி  மைக்க  வுபசா  ரமிஞ்ச 
அவச  கவசமள  வியலேத  ரிக்க  அதிலே  யநந்த 
புதுமை  விளையஅது  பரமாப  ரிக்க  இணைதோ  ளுமொன்றி  ......  அதிசுகக்  கலையாலே 
புளக  முதிரவிர  கமென்வாரி  தத்த  வரைநாண்  மழுங்க 
மனமு  மனமுமுரு  கியெயாத  ரிக்க  வுயிர்போ  லுகந்து 
பொருள  தளவுமரு  வுறுமாய  வித்தை  விலைமா  தர்சிங்கி  ......  விடஅருட்  புரிவாயே 
பரவு  மகரமுக  ரமுமேவ  லுற்ற  சகரால்  விளைந்த 
தமர  திமிரபிர  பலமோக  ரத்ந  சலரா  சிகொண்ட 
படியை  முழுதுமொரு  நொடியேம  தித்து  வலமா  கவந்து  ......  சிவனிடத்  தமர்சேயே 
பழநி  மிசையிலிசை  யிசையேர  கத்தில்  திருவா  வினன்கு 
டியினில்  பிரமபுர  மதில்வாழ்தி  ருத்த  ணிகையூ  டுமண்டர் 
பதிய  முதியகதி  யதுநாயெ  னுக்கு  முறவா  கிநின்று  ......  கவிதையைப்  புனைவோனே 
அரியு  மயனுமம  ரருமாய  சிட்ட  பரிபா  லனன்ப 
ரடையு  மிடரைமுடு  கியெநூற  துட்ட  கொலைகா  ரரென்ற 
அசுரர்  படையையடை  யவும்வேர  றுத்த  அபிரா  மசெந்தி  ......  லுரகவெற்  புடையோனே 
அருண  கிரணகரு  ணையபூர  ணச்ச  ரணமே  லெழுந்த 
இரண  கரணமுர  ணுறுஞ்ர  னுட்க  மயிலே  றுகந்த 
அருணை  யிறையவர்பெ  ரியகோபு  ரத்தில்  வடபா  லமர்ந்த  ......  அறுமுகப்  பெருமாளே. 
  • இரத சுரத முலைகளு(ம்) மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க இசலி இசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க
    சுவை கொண்டதும் இன்பம் தருவதுமான தனங்களும் மார்பில் அழுத்த, நெற்றியில் வேர்வை துளிர்க்க, காமம் பெருகும் நிலையிலே விரல்களின் நகக்குறி தைக்க, (அக்குறிகளில் கசியும் ரத்தம்) ரத்தினம் போல் ஒளி பெருக, அடிக்கடி பிணக்கு ஊடல் கொண்டு பிறகு மேல் விழும் கலவி லீலைகளை விளையாடி, நூல் போன்ற மெல்லிய இடை துவள,
  • உ(ள்)ள மகிழ்ச்சியினோடே இருவர் உடலும் ஒரு உருவாய் நயக்க முக(ம்) மேல் அழுந்த அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த லகரி பெருக
    உள்ளத்தில் களிப்புடன் இருவர் உடலும் ஒன்றுபட்டு ஒருவராகி இன்பம் தர முகத்தின் மேல் முகம் அழுந்த, கூந்தல் அவிழ்ந்து விழ, வளைகள் ஒலிக்க, கண் என்னும் தாமரையில் மயக்கம் பெருக,
  • அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழப் பரிவாலே புருவம் நிமிர இரு கண் அ(வ்)வாள் நிமைக்க உபசார(ம்) மிஞ்ச அவசம் கவசம் அளவு இயலே தரிக்க
    வாய் இதழ் ஊறலை தக்கபடி உண்ண வேண்டிய முறைப்படி அருந்த, அன்பு காரணத்தால் சில சொற்கள் பேச, புருவம் மேல் எழ, இரு கண்களும் ஒளி வீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, தன்வசம் அழிதலானது மேற் போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக,
  • அதிலே அநந்த புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுகக் கலையாலே புளக(ம்) முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க
    அப்போது கணக்கற்ற புதிய உணர்ச்சிகள் தோன்ற, அவ்வுணர்ச்சியை நன்றாக அனுபவிக்க இரண்டு தோள்களும் ஒன்றிக் கலந்து, அதிக சுகமாகிய பகுதியால் புளகாங்கிதம் நிறைய, காமம் என்கின்ற கடல் ததும்பிப் பரவ, இடுப்பில் கட்டியுள்ள கயிறும் அரைஞாணும் ஒளி குறைந்து அறுபட,
  • மனமும் மனமும் உருகியெ ஆதரிக்க உயிர் போல் உகந்து பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலை மாதர் சிங்கி விட அருள் புரிவாயே
    மனத்தோடு மனம் உருகி அன்பு மேற்கொள்ள உயிர் போல மகிழ்ந்து பாவித்து, பொருள் கிட்டும் வரையில் கலந்து களிக்கும் மாயவித்தை வல்ல பொது மகளிரின் விஷச் சூழலை விட்டொழிக்க அருள் புரிவாயாக.
  • பரவு மகர முகரமு(ம்) மேவல் உற்ற சக(ர)ரால் விளைந்த தமர(ம்) திமிர(ம்) பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே
    போற்றப்படும் மகர மீனும் சங்கும் கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதால் சாகரம் என்ற பெயர் கொண்டதாய், பேரொலி உடையதாய், இருள் நிறைந்ததாய், பிரசித்தி பெற்றதாய், கவர்ச்சி உள்ளதாய், ரத்தினங்களும் மணிகளும் கொண்டதாய் உள்ள கடல் சூழ்ந்த உலகை, முழுதும் ஒரு நொடிப் பொழுதில் அளவிட்டு வலம் வந்து (தந்தையாகிய) சிவபெருமானிடத்து அமர்ந்த குழந்தையே,
  • பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன் குடியினில் பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும் அண்டர் பதிய
    பழநி மலை மீதும், புகழோடு கூடிய சுவாமி மலையிலும், திருவாவினன்குடியிலும், சீகாழியிலும், நீ என்றும் மங்கலமாய் வாழ்கின்ற திருத்தணிகையிலும் உறைவிடம் கொண்டவனே, தேவர்கள் உன்னைத் தரிசிக்க வருகின்ற அத்தலங்களில் எல்லாம் உறைபவனே,
  • முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையைப் புனைவோனே
    பழம் பொருளாகிய வீட்டின்பமானது இந்த அடிமைக்கும் கிட்டும்படியாக நின்று என் பாமாலையை அணிந்து கொள்பவனே,
  • அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர் அடையும் இடரை முடுகியெ நூற துட்ட கொலைகாரர் என்ற அசுரர் படையை அடையவும் வேர் அறுத்த அபிராம
    திருமாலும் பிரமனும் தேவர்களும் ஆகிய மேலோர்களைக் காத்து அருள்பவனே, உன் அடியார்கள் அடையும் துயரத்தை ஓட்டித் தூளாக்க, துஷ்டர்களான கொலைகாரர்கள் எனப்படும் அசுரர்களின் சேனையை முழுமையும் வேரறுத்த அழகனே,
  • செந்தில் உரக வெற்பு உடையோனே அருண கிரண கருணைய பூரணச் சரணம் மேல் எழுந்த இரண கரணம் முரண் உறு சூரன் உட்க மயில் ஏறு கந்த
    திருச்செந்தூர், நாகமலை என்ற திருச்செங்கோடு என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, செவ்விய ஒளி வீசுவதும் உனது கருணை பூரணமாக நிறைந்ததுமான திருவடியைப் பகைத்து மேலெழுந்த போர்க்குணம் கொண்டவனாய் மாறுபட்டு எழுந்த சூரன் அஞ்சும்படி மயிலின் மேல் ஏறிவரும் கந்தனே,
  • அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுகப் பெருமாளே.
    திருவண்ணாமலையில் வாழும் சிவபெருமானுடைய திருக்கோயிலின் பெரிய கோபுரத்திற்கு வடதிசையில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com