திருப்புகழ் · 265குவளைக் கணை (திருத்தணிகை)

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான

Nangalappa Sharanam

குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப் ...... பிறையாலே
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித் ...... தளராதே
இவளைத் துவளக் கலவிக் குநயத்
திறுகத் தழுவிப் ...... புயமீதெ
இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் ...... தரவேணும்
கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப் ...... பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத் ...... தெழுமார்பா
பவளத் தரளத் திரளக் குவைவெற்
பவையொப் புவயற் ...... புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப் ...... பெருமாளே.

பத உரை

  • குவளைக் கணை தொட்ட அவனுக்கு முடிக் குடை இட்ட குறைப் பிறையாலே
    (ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல மலர்* அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக அமைத்த, களங்கத்தை உடைய சந்திரனுடைய (வெப்பத்துக்கும்),
  • குறுகு உற்ற அலர்த் தெரிவைக்கு மொழிக் குயிலுக்கும் இனித் தளராதே
    பழிச்சொல் பேசி நெருங்கிவரும் மங்கையர்க்கும், இனிய குரலுடன் கூவும் குயிலுக்கும் இனிமேல் தளராதவாறு,
  • இவளைத் துவளக் கலவிக்கு நயத்து இறுகத் தழுவிப் புயம் மீதே இணை அற்ற அழகில் புனையக் கருணைக்கு இனிமைத் தொடையைத் தர வேணும்
    (உன் மேல் காதல் கொண்ட) இந்தப் பெண்ணை துவள்கின்ற கூடல் இன்பத்துக்கு விரும்பி அழுத்தமாகத் தழுவி, உன் தோள்களின் மேல் விளங்கும் இனிமையான (கடப்ப) மாலையை ஒப்புதல் இல்லாத அழகுடன் இவள் அணிந்து கொள்ள, கருணையுடன் நீ தந்தருள வேண்டும்.
  • கவளக் கரடக் கரி எட்டு அலறக் கனகக் கிரியைப் பொரும் வேலா
    உணவு உண்டை உண்பனவும், மதம் பாயும் சுவட்டை தாடையில் கொண்டனவுமான யானைகள் எட்டும் (அஷ்ட திக்கஜங்களும்) அலறிப் பயப்பட, பொன் மலையாகிய கிரெளஞ்சத்துடன் போர் செய்த வேலனே,
  • கருதிச் செயலைப் புயனுக்கு உருகிக் கலவிக்கு அணய அத்து எழு மார்பா
    அசோக* மலர்க் கணையைத் தோளில் ஏந்திய மன்மதனின் வேண்டுமென்றே அம்பெய்த செயலால் (வள்ளியைத் தழுவ) மனம் உருகிச் சேருதற்கு விரும்பி எழுகின்ற மார்பனே.
  • பவளத் தரளத் திரளக் குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே
    பவளம், முத்து இவை திரண்டுள்ள குவியல்கள் மலை போல் கிடக்கும் வயற் புறங்களின் மேல்
  • பணிலத் திரள் மொய்த்த திருத்தணிகைப் பதியில் குமரப் பெருமாளே.
    சங்கின் கூட்டங்கள் நிறைந்த திருத்தணிகை என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) குமரப் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * மன்மதனுடைய ஐந்து கணைகளாவன: முதற் கணை = தாமரை. நடுக் கணை = அசோகம். கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை. அசோகமலருக்கு செயலை என்று பெயர் உண்டு.
  • இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் செவிலித்தாய் பாடுவதுபோல் அமைந்தது. மன்மதன், அவனது மலர்க் கணைகள், சந்திரன், பழிச்சொல் பேசும் மங்கையர், குயில் ஓசை இவையெல்லாம் தலைவனைப் பிரிந்த தலைவியின் விரகதாபத்தைக் கூட்டுவன.
  • * Manmathan's five flowery arrows are as follows: first arrow - lotus; second - mango; third (middle) arrow - asOkam (also known as ceyalai); fourth - jasmine; fifth (last) - blue lily (NeelOthpalam).
  • This song has been written in the Nayaka-Nayaki BhAva, where the poet has assumed the role of the heroine's God-mother portraying the pangs of separation of her daughter from Lord Murugan. The Love God, the flowery arrows, the moon, the scandal-mongering women and the cooing of the cuckoo are some of the sources which aggravate the agony of separation from the Lord.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout