திருப்புகழ் · 214குமர குருபர முருக சரவண (சுவாமிமலை)

தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான

Yaazh Music

குமர குருபர முருக சரவண
குகசண் முககரி ...... பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குரு ...... மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின ...... முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர ...... லறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட ...... வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் ...... குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.

பத உரை

  • குமர குருபர முருக சரவண குக சண்முக
    குமரா, குருபரா, முருகா, சரவணா, குகா, சண்முகா,
  • கரி பிறகான குழக
    யானைமுகக் கணபதிக்குப் பின்பிறந்த இளையோய்,
  • சிவசுத
    சிவ குமாரனே,
  • சிவய நமவென குரவன்
    சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக் குருவான சிவன்
  • அருள் குருமணியே யென்று
    அருளிய குருமணியே என்றெல்லாம்,
  • அமுத இமையவர் திமிர்தம் இடுகடலதென
    அமிர்தத்தை தேவர்கள் கடைந்திட்ட கடல் ஓசைபோல்,
  • அநுதினம் உனையோதும்
    நாள்தோறும் உன்னை வாயாரப் பாடி
  • அமலை அடியவர்
    ஆரவாரத்துடன் துதிக்கும் அடியார்கள்
  • கொடிய வினைகொடும்
    தமது கொடிய வினைகள் நீங்குவதற்காக
  • அபய மிடுகுரல் அறியாயோ
    அபயம் என்று ஓலமிடும் குரலொலி உனக்குக் கேட்கவில்லையோ?
  • திமிர எழுகட லுலக முறிபட
    இருண்ட ஏழு கடல்களும் உலகங்களும் அழிய,
  • திசைகள் பொடிபட
    எட்டுத்திசைகளும் பொடிபட,
  • வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழ
    போருக்கு வந்த சூரர்களின் குடுமியும் உடலும் விழ,
  • உயிர் திறைகொடு அமர்பொரும் அயில்வீரா
    அவர்களின் உயிரைக் கவர்ந்து போரிட்ட வேல் வீரா,
  • நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல்
    யமனின் உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*,
  • நதிகொள் சடையினர் குருநாதா
    கங்கைநதியைத் தாங்கிய சடையும் உடைய சிவனின் குருநாதா,
  • நளின குருமலை மருவி யமர்தரு
    தாமரை நிறைந்த சுவாமிமலையில் பொருந்தி அமர்ந்தோனே,
  • நவிலு மறைபுகழ் பெருமாளே.
    ஓதும் வேதங்கள் புகழும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * மார்க்கண்டேயனுக்காக யமனது உயிரை சிவபெருமான் காலால் உதைத்து எடுத்த காலபைரவ மூர்த்திக் கோலத்தை திருக்கடையூரில் காணலாம்.
  • * In MArkkandEya PuraNam, to save the life of His devotee, MArkkaNdeyA, who surrendered to Him, Lord SivA kicked Yaman to death with His foot, in the form of KAla Bhairava MUrthi in ThirukkadaiyUr.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout