தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன ...... தனதான
ஏடுக்கொத் தாரலர் வார்குழ
லாடப்பட் டாடைநி லாவிய
ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர்
ஏதத்தைப் பேசுப ணாளிகள்
வீசத்துக் காசைகொ டாடிகள்
ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர்
மாடொக்கக் கூடிய காமுகர்
மூழ்குற்றுக் காயமொ டேவரு
வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய்
மாசுற்றுப் பாசம்வி டாசம
னூர்புக்குப் பாழ்நர கேவிழு
மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே
தாடுட்டுட் டூடுடு டீடிமி
டூடுட்டுட் டூடுடு டாடமி
தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி
தானொத்தப் பூதப சாசுகள்
வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே
கூடற்கச் சாலைசி ராமலை
காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்
கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
- ஏடுக் கொத்து ஆர் அலர் வார் குழல் ஆடப் பட்டு ஆடை
நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர்
இதழ்களை உடைய கொத்தான மலர்களைக் கொண்ட நீண்ட கூந்தல் அசைந்தலைய, பட்டு ஆடை விளங்கும், (ஆடவர்களுக்குத்) துன்பம் தருவதான அழகிய தோள்கள் மீது மூடிய விஷம் போன்ற விலைமாதர். - ஏதத்தைப் பேசு பண ஆளிகள் வீசத்துக்கு ஆசை கொ(ண்)டு
ஆடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர்
குற்றம் கண்டே பேசும், பணத்தை ஆட்சி செய்வதிலேயே நோக்கம் வைத்துள்ளவர்கள். ஒரு மாகாணி அளவே ஆசை கொண்டவர்களாக நடிப்பவர்கள். ஏறிவிட்ட பின் ஏணியை வீழ்த்தித் தள்ளி விடுபவர்கள். முழுமையான வஞ்சகர்கள். - மாடு ஒக்கக் கூடிய காமுகர் மூழ்கு உற்றுக் காயமொடே வரு
வாயுப் புல் சூலை வியாதிகள் இவை மேலாய்
மாடு போலப் புணரும் காமம் கொண்டவர்கள் ஆகிய மாதர்கள் வசம் முழுகி அதனால் உடலில் வந்த இழிவானதான ஒரு வகை வயிற்று உளைவு நோயும், மற்ற நோய்களும் அதிகப்பட்டு, - மாசுற்றுப் பாசம் விடா சமனூர் புக்குப் பாழ் நரகே விழு
மாயத்தைச் சீவி உன் ஆதரவு அருள்வாயே
கேடு அடைந்து இறந்து, பாசக் கயிற்றை விடாத யமனுடைய உலகத்தில் புகுந்து பாழும் நரகத்தில் விழும் தீமையைச் செதுக்கிக் கழித்து, உன்னுடைய அன்பை அருள் புரிவாயாக. - தாடுட்டுட் டூடுடு டீடிமி
டூடுட்டுட் டூடுடு டாடமி
தானத்தத் தானத னா என வெகு பேரி
(இவ்வாறு ஒலிக்கும்) பலவகைப் பேரிகளுடன், - தானொத்தப் பூத பசாசுகள் வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
சாகப் பொன் தோகையில் ஏறிய சதிரோனே
ஒத்த குரலில் பூதங்களும் பேய்களும் ஓலமிடும்படி, சூரர்களுடைய படைகள் இறக்க, அழகிய மயிலின் மேல் ஏறிய பெருமை வாய்ந்தவனே, - கூடல் கச்சாலை சிராமலை காவைப் பொன் காழி வெளூர்
திகழ் கோடைக் கச்சூர் கருவூரிலும் உயர்வான
மதுரை, கச்சிக் கச்சாலை, திருசிராப் பள்ளி, திருவானைக்கா, அழகிய சீகாழி, வைத்தீசுரன் கோயில், விளங்கும் வல்லக் கோட்டை, திருக்கச்சூர், கருவூர் ஆகிய தலங்களிலும் மேன்மை வாய்ந்ததும், - கோது இல் பத்தாரொடு மா தவ சீலச் சித்தாதியர் சூழ் தரு
கோலக் குற்றாலம் உலாவிய பெருமாளே.
குற்றமில்லாத பக்தர்களுடன் பெரிய தவம் செய்த பரிசுத்தமான சித்தராகிய பெரியோர்கள் கருதி வலம் வந்ததுமான அழகிய குற்றாலத்தில்* உலவுகின்ற பெருமாளே.