திருப்புகழ் 967 முத்து நவரத்நமணி (மதுரை)

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
முத்துநவ  ரத்நமணி  பத்திநிறை  சத்தியிட 
மொய்த்தகிரி  முத்திதரு  ......  வெனவோதும் 
முக்கணிறை  வர்க்குமருள்  வைத்தமுரு  கக்கடவுள் 
முப்பதுமு  வர்க்கசுர  ......  ரடிபேணி 
பத்துமுடி  தத்தும்வகை  யுற்றகணி  விட்டஅரி 
பற்குனனை  வெற்றிபெற  ......  ரதமூரும் 
பச்சைநிற  முற்றபுய  லச்சமற  வைத்தபொருள் 
பத்தர்மன  துற்றசிவம்  ......  அருள்வாயே 
தித்திமிதி  தித்திமிதி  திக்குகுகு  திக்குகுகு 
தெய்த்ததென  தெய்தததென  ......  தெனனான 
திக்குவென  மத்தளமி  டக்கைதுடி  தத்ததகு 
செச்சரிகை  செச்சரிகை  ......  யெனஆடும் 
அத்தனுட  னொத்தநட  நித்ரிபுவ  னத்திநவ 
சித்தியருள்  சத்தியருள்  ......  புரிபாலா 
அற்பவிடை  தற்பமது  முற்றுநிலை  பெற்றுவள 
ரற்கனக  பத்மபுரி  ......  பெருமாளே. 
  • முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி
    முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும்,
  • முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள்
    முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள்,
  • முப்பது முவர்க்க சுரர் அடி பேணி
    முப்பத்து மூன்று* வகையான தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப,
  • பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி
    (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால்,
  • பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்
    அருச்சுனன் (மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து) தேரைச் செலுத்திய,
  • பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்
    பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த முருகக் கடவுளே,
  • பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே
    பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.
  • தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்குவென மத்தளம் இடக்கைதுடி
    (இவ்வகை) ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி, உடுக்கை ஆகியவை ஒலிக்க,
  • தத்ததகு செச்சரிகை செச்சரிகை யெனஆடும்
    தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும்
  • அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி அருள் புரிபாலா
    தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம் புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய குழந்தையே,
  • அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல்
    நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும்,
  • கனக பத்ம புரி பெருமாளே.
    பொற்றாமரைக் குளம் அமைந்த பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com