தத்தன தானான தத்தன தானான
தத்தன தானான ...... தனதான
பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோன ...... சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார ...... நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான ...... வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத ...... மறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி ...... மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
யுற்பல ராசீவ ...... வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.
- பக்குவ ஆசார
பக்குவமான ஆசார ஒழுக்க நிலையிலே நின்று, - லட்சண சாகாதி பட்சணமா
சிறப்பான பச்சிலை, மூலிகைகள் போன்ற உணவையே உண்டு, - மோன சிவயோகர்
மெளனத் தவநிலையில் நிற்கும் சிவயோகிகள் - பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு பற்று
தங்களது பக்தி மூலமாக முப்பத்தாறு* தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய் உள்ள மோக்ஷவீட்டைப் பற்றுவதானதும், - நிராதார நிலையாக
எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை நான் அடைவதற்காகவும், - அக்கணமே மாய துர்க்குணம் வேறாக
அந்நிலையை நான் அடைந்ததுமே, மாயமாக வந்து என்னைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் என்னை விட்டுப் பிரியவும், - அப்படையேஞானவுபதேசம்
அந்த ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாக மாறி, - அக்கற வாய்பேசு சற்குரு நாதா
பாசம் யாவும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை வாய்விட்டுக் கூறிய சற்குருநாதனே, - உன் அற்புத சீர்பாத மறவேனே
உனது அற்புதமான அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன். - உக்கிர ஈராறு மெய்ப்புயனே
வலிமைமிக்க பன்னிரு தோள்களை, உண்மைக்கு எடுத்துக்காட்டான புயங்களை உடையவனே, - நீல உற்பல வீராசி மணநாற
நீலோத்பல மலர்க் கூட்டங்களின் நறுமணம் மிகவும் வீசுவதும், - ஒத்தநி லாவீசு
பொருந்திய நிலாவின் ஒளி வீசுவதும், - நித்தில நீராவி உற்பல ராசீவ வயலூரா
முத்தைப் போல் தெளிவான நீருள்ள குளங்களில் குவளைகளும், தாமரைகளும் பூத்திருக்கும் வயலூரின் நாதனே, - பொக்கமி லாவீர விக்ரம
பொய்யே இல்லாத மெய்யான வீரத்தைக் கொண்டவனே, - மாமேனி பொற்ப்ரபை யாகார
அழகிய மேனி பொன்னொளியை வீசும் தேகத்தை உடையவனே, - அவிநாசிப் பொய்க்கலி போமாறு
அவிநாசி என்ற தலத்தில் இந்தக் கலியுகத்தின் பொய்மை நீங்குமாறு - மெய்க்கருள் சீரான
இறைவன் திருவருளின் புகழ் சிறக்கும்படிச் செய்த** - புக்கொளி யூர்மேவு பெருமாளே.
திருப்புக்கொளியூர்*** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.